சென்னை :கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் பாலாஜி கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்பொது, அரசு மருத்துவருக்கு கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் எதிரொலியாக, காலவரையற்ற வேலைநிறுத்தத்தை அரசு மருத்துவர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
அதன்படி, மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கக்கோரி, தமிழகம் முழுவதும் உயிர்காக்கும் சிகிச்சையை தவிர மற்ற அனைத்து சிகிச்சை பிரிவுகளும் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, மருத்துவர் தாக்குதலை கண்டித்து மருத்துவமனை வளாகத்தில் அமர்ந்து மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், மருத்துவத்துறை முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “மருத்துவர் பாலாஜியை மர்மநபர்கள் பட்டப்பகலில் கத்தியால் குத்தியுள்ள சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. கத்திக் குத்தால் பாதிக்கப்பட்டுள்ள மருத்துவருக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும். தாக்கியவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “ஏற்கனவே கடந்த நவம்பர் 5ஆம் தேதி திருச்சி இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் அரசு மருத்துவர் முத்து கார்த்திகேயனை 6 பேர் கொண்ட கும்பல் தாக்கியதாக செய்திகள் வந்தன.
அரசு மருத்துவமனையில் அரசு மருத்துவருக்கு கூட பாதுகாப்பு இல்லை என்பது, இந்த ஆட்சியில் சட்டம் ஒழுங்கு எவ்வாறு இருக்கிறது என்பதை பட்டவர்த்தனமாக காட்டுகிறது.
கொடுங்குற்றங்களைக் கூட எந்த இடத்திலும் துளியும் அச்சமின்றி குற்றவாளிகள் செய்யலாம் என்ற அளவிற்கு சட்டம் ஒழுங்கை சீர்குலைத்துள்ள ஸ்டாலினின் விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்” இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
unknown node