ஒரே ஆண்டில் ரூ..18,000 கோடியாக உயர்வு..மிரள வைக்கும் ட்ரம்ப் வருமானம்!

மொத்த வருமானத்தில் 1.4 பில்லியன் டாலர் கிரிப்டோகரன்சி வணிகத்தின் மூலமே வந்துள்ளது. பாரம்பரிய வணிகங்களான ஹோட்டல், கோல்ஃப் கிளப்களை விட கிரிப்டோவே முதலிடம் பிடித்துள்ளது.

Hero Image

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், 2025-ஆம் ஆண்டில் ஈட்டிய வருமானம் குறித்த 927 பக்கங்கள் கொண்ட வருடாந்திர நிதிநிலை அறிக்கை ஜூலை 1-ஆம் தேதி வெளியாகியுள்ளது. இந்த அறிக்கை, அமெரிக்க வரலாற்றிலேயே முன்னெப்போதும் இல்லாத வகையில், ஒரு அதிபரின் வருமானம் மற்றும் வணிக ஆர்வங்கள் குறித்த பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2024-ஆம் ஆண்டில் குறைந்தபட்சம் 622 மில்லியன் டாலராக இருந்த ட்ரம்ப்பின் வருமானம், 2025-இல் 2.2 பில்லியன் டாலராக (சுமார் 18,000 கோடி ரூபாய்க்கும் மேல்) ராக்கெட் வேகத்தில் உயர்ந்துள்ளது.

ட்ரம்ப்பின் வருமான உயர்விற்கு மிக முக்கியமான காரணம் கிரிப்டோகரன்சி வணிகம் தான். 2025-இல் அவர் வெள்ளை மாளிகைக்குத் திரும்பிய பிறகு, கிரிப்டோ மூலம் மட்டுமே சுமார் 1.4 பில்லியன் டாலர்களை வருமானமாக ஈட்டியுள்ளார். இதில் மிக முக்கியமான பங்களிப்பை அளித்தது, அவரும் அவரது மகன்களும் இணைந்து தொடங்கிய 'வேர்ல்ட் லிபர்ட்டி ஃபைனான்சியல்' (World Liberty Financial) நிறுவனம். டோக்கன் விற்பனை மற்றும் ஐக்கிய அரபு அமீரக அரசின் முதலீடு ஆகியவற்றின் மூலம் மட்டும் 800 மில்லியன் டாலர் வரை அவர் வருமானம் பெற்றுள்ளதாகத் தெரிகிறது.

மேலும், ட்ரம்ப்பின் சொந்த மெம்காயினான $TRUMP-ன் பின்னால் இருக்கும் CIC Digital LLC நிறுவனம் 636 மில்லியன் டாலர் வருமானத்தைத் தந்துள்ளது. பாரம்பரிய வணிகங்களான மார்-ஏ-லாகோ (Mar-a-Lago) கிளப் மூலம் 77 மில்லியன் டாலரும், வடக்கு வர்ஜீனியாவில் உள்ள அவரது கோல்ஃப் கிளப் மூலம் 25 மில்லியன் டாலரும் மட்டுமே கிடைத்துள்ளது. கிரிப்டோ வருமானத்தோடு ஒப்பிடும்போது, இவை மிகச் சிறிய தொகையாகவே உள்ளன.

இந்த வருமான உயர்வு பல கேள்விகளை எழுப்பியுள்ளது. பைனான்ஸ் (Binance) நிறுவனர் சாங்பெங் ஜாவோவிற்கு அதிபர் ட்ரம்ப் பொதுமன்னிப்பு வழங்கியதும், ஜூலை மாதம் அவர் கையெழுத்திட்ட 'ஸ்டேபிள்காயின்' (Stablecoin) சட்டமும் நேரடியாகத் தனது சொந்த கிரிப்டோ வணிகங்களுக்குப் பலன் தருவதாக அமைந்துள்ளது.

இது குறித்து வரி வழக்கறிஞர் மேகன் கோர்மேன் கூறுகையில், "இது முற்றிலும் முன்னெப்போதும் நடக்காத ஒன்று. நாட்டின் தலைவர்கள் தங்கள் நலனை விடத் தேச நலனுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்ற ஜார்ஜ் வாஷிங்டன் காலத்து அமெரிக்க சமூக ஒப்பந்தத்தை, ட்ரம்ப்பின் இந்தச் செயல்கள் காட்டிக் கொடுத்துவிட்டன" என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.