"பட்டாசு விபத்தில் பலியானவர்களுக்கு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும்" – மதுரை கிளை உத்தரவு.!

பட்டாசு விபத்தில் உயிரிழந்தவர்களுக்கான இழப்பீடு தொகையை 10 லட்சமாக வழங்க உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.

Crackers Fire Accident - madurai high court

மதுரை :தமிழ்நாட்டில் பட்டாசு ஆலைகளில் வெடிவிபத்துகள், குறிப்பாக விருதுநகர், சிவகாசி போன்ற பகுதிகளில் அடிக்கடி நிகழ்கின்றன. இந்த விபத்துகளில் பல தொழிலாளர்கள் உயிரிழப்பதும், காயமடைவதும் தொடர்ச்சியாக நடந்து வருகிறது. இதற்கு முக்கிய காரணங்களாக பாதுகாப்பு விதிமுறைகளை முறையாகப் பின்பற்றாமை, தொழிலாளர்களுக்கு முறையான பயிற்சி இல்லாமை, மற்றும் ஆலை நிர்வாகங்களின் அலட்சியம் ஆகியவை கருதப்படுகின்றன.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன், விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே எட்டக்காபட்டியில் ஒரு பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 தொழிலாளர்கள் இறந்தனர். இதையடுத்து உயிரிழந்த குடும்பத்தினர் தொடர்ந்த வழக்கில் இன்று (ஜூன் 20) உயர்நீதிமன்ற மதுரை கிளை, பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

அதுமட்டுமின்றி, பட்டாசு ஆலை விபத்துக்கு உரிமையாளர் காரணமாக இருந்தால் உரிமத்தை ரத்து செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், ஆலைகளில் உரிமம், பாதுகாப்பு அலுவலர் நியமனம் உள்ளிட்ட விதிகளை கடுமையாக பின்பற்றுவதை அரசு உறுதி செய்ய வேண்டும்.

தொடர் ஆய்வு, பாதுகாப்பு பயிற்சி, வெடி பொருள் சட்டம் உள்ளிட்ட விதிகளையும் அரசு முறையாக பின்பற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. விபத்துக்கு ஆலை உரிமையாளர்கள் முழு பொறுப்பு ஏற்க வேண்டும். விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மறுவாழ்வு திட்டங்களை அமல்படுத்த வேண்டும் என்று நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.