“இப்போவாவது மத்திய அரசு கீழடி அறிக்கையை வெளியிடுமா தமிழர்களின் ஒரே கேள்வி” – தங்கம் தென்னரசு!

கீழடியில் 2,500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தமிழர்களின் முகங்கள் முப்பரிமாண முறையில் வடிவமைத்து வெளியிடபட்டுள்ளது.

Keeladi - Thangam Thenarasu

சென்னை :கீழடியில் 2,500 ஆண்டுகளுக்கு முன் தமிழர்கள் எப்படி இருந்தார்கள் தெரியுமா? கொந்தகையில் கிடைத்த 2 மண்டை ஓடுகள் மூலம் அதற்கான விடை கிடைத்துள்ளது பிரிட்டனைச் சேர்ந்த ஆய்வகம் 3டி முறையில் பழங்கால தமிழர்களின் இரு முகங்களை வடிவமைத்திருக்கிறது.

80% அறிவியல்பூர்வமாகவும், 20% கலைப்பூர்வமாகவும் அந்த முகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், “இதற்கு பின்பாவது ஒன்றிய அரசு கீழடி அறிக்கையை வெளியிடுமா என்பதே 8 கோடி தமிழர்களின் மனங்களில் எழும் ஒரே கேள்வி” என்று அமைச்சர் தங்கம் தென்னரசு சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

அமைச்சர் தங்கம் தென்னரசு தனது எக்ஸ் பக்கத்தில், ”கீழடியில் கிடைத்த மனித மண்டை ஓடுகளை ஆய்வு செய்து அறிவியல் வழியில் 2500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மனிதனின் முகத்தை வடிவமைத்துள்ளது இங்கிலாந்தின் லிவர்பூல் ஜான் மூர்ஸ் பல்கலைக்கழகம்.

கீழடியில் தமிழ் மக்கள் நாகரிகத்தில் சிறந்தவர்களாக வாழ்ந்தார்கள் என்பதற்கான அறிவியல் சான்றுகள் ஒன்றின் பின் ஒன்றாக உலக அரங்கில் நிரூபிக்கப்படுவது மட்டற்ற மகிழ்ச்சியைத் தருகிறது. மத்திய பாஜக அரசு தமிழர்களின் வரலாறு மற்றும் பாரம்பரியத்தை வஞ்சகமாக நசுக்க முயன்றாலும், கீழடி அகழ்வாராய்ச்சியிலிருந்து வெளிவரும் ஆக்கபூர்வமான அறிவியல் கண்டுபிடிப்புகள் மற்றும் வரலாற்று சான்றுகள் மத்திய அரசின் அநீதி மற்றும் மறுப்புகளைத் தொடர்ந்து முறியடித்து வருகின்றன.

கீழடி ஆராய்ச்சி அறிக்கையை குறைந்தபட்சம் இப்போதாவது வெளியிடுமாறு மத்திய அரசை நான் வலியுறுத்துகிறேன். இதற்கு பின்பாவது ஒன்றிய அரசு கீழடி அறிக்கையை வெளியிடுமா என்பதே 8 கோடி தமிழர்களின் மனங்களில் எழும் ஒரே கேள்வி” என்று குறிப்பிட்டுள்ளார்.

unknown nodeunknown node