“நெஞ்சை நிமிர்த்தி சொல்வேன்.., மின்சார வாகன உற்பத்தியில் இந்தியாவின் தலைநகர் தமிழ்நாடுதான்” – மு.க.ஸ்டாலின்.!

இந்தியாவில் மின் வாகன உற்பத்தியின் தலைநகர் தமிழ்நாடுதான் என்று நெஞ்சை நிமிர்த்தி நான் சொல்வேன் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

Featured image

தூத்துக்குடி :தூத்துக்குடியில் அமைக்கப்பட்டுள்ள வின்ஃபாஸ்ட் (VinFast) மின்சார வாகன உற்பத்தி தொழிற்சாலையை திறந்து வைத்து அதன் விற்பனை தளத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். ரூ.16 ஆயிரம் கோடி முதலீட்டில் ஆண்டுக்கு 1.5 லட்சம் மின்சார வாகனங்களை உற்பத்தி செய்யும் வகையில் இந்த ஆலை அமைக்கப்பட்டுள்ளது.

அதன் பிறகு, அந்த ஆலைக்குள் நடைபெறும் பணிகள் குறித்து அங்கு சென்று பார்வையிட்டு வந்தார். இதனை தொடர்ந்து திறப்பு விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ”இந்த ஆலையின் திறப்பு விழாவிற்கு வருகை தந்த அந்நிறுவனத்தின் அதிகாரிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வியட்நாம் மொழியில் பேசி வரவேற்றார்.

வின்ஃபாஸ்ட் நிறுவனம் தமிழ்நாட்டில் முதலீடு செய்ததை பெருமையாக கருதுகிறேன். வியட்நாம் நாட்டைச் சேர்ந்த வின்ஃபாஸ்ட் ஆலைக்கு நான் அடிக்கல் நாட்டிய 17 மாதங்களில் தமிழ்நாட்டில் நிறுவனத்தை தொடங்கி பெருமை சேர்த்துள்ளார்கள். வியட்நாம் என்றாலே வியப்புதான்” என்றார்.

தொடர்ந்து  பேசிய அவர், ”இந்தியாவில் மின் வாகன உற்பத்தியின் தலைநகர் தமிழ்நாடுதான் என்று நெஞ்சை நிமிர்த்தி நான் சொல்வேன். நாட்டின் ஒட்டுமொத்த EV உற்பத்தியில் 40% தமிழ்நாட்டில்தான் உற்பத்தி ஆகிறது. வின்ஃபாஸ்ட் தன்னுடைய, கல்வி, மருத்துவம் உள்ளிட்ட அனைத்து துறைகளின் முதலீட்டையும் தமிழ்நாட்டின் மேற்கொள்ள வேண்டும்.

உலகளாவிய முதலீட்டில் உள்ளூர் வளர்ச்சி என்பது தான் திராவிட மாடல் அரசின் நோக்கம். அந்த நோக்கம் தற்போது நிறைவேறியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் வின்ஃபாஸ்ட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பை பெற்றுள்ளார்கள். 80% – 90% பணியாளர்களை தூத்துக்குடி மற்றும் பக்கத்து மாவட்டங்களில் இருந்து தான் வின்ஃபாஸ்ட் நிறுவனம் பணியமர்த்தவுள்ளது” என்று கூறினார்.