கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை! வெளியான அறிவிப்பு!

கரும்பு ஆலைகளுக்கு பதிவு செய்து கரும்பு வழங்கும் விவசாயிகளுக்கும் சிறப்பு ஊக்கத்தொகை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

tn government - Sugarcane farmer (1)

சென்னை :கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகையை வழங்க ரூ.247 கோடி ஒதுக்கி உத்தரவிட்டுள்ளது தமிழக அரசு. அதன்படி, 2023 மற்றும் 2024 ஆண்டுகளில் அரவை பருவத்திற்காக சர்க்கரை ஆலைகளுக்கு பதிவு செய்தோருக்கும் சிற்பபு ஊக்கத்தொகை வழங்கப்படும் என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

மேலும், சர்க்கரை ஆலைக்கும் இந்த சிறப்பு ஊக்கத்தொகையானது வழங்கப்படும் எனவும் சிறப்பு ஊக்கத்தொகையுடன் சேர்த்து டன் ஒன்றுக்கு ரூ.3134.75 ரூபாயும் வழங்கப்படும் என உறுதி செய்யப்பட்டுள்ளது என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியான அறிக்கையில், “கரும்பு விவசாயிகளின் மீது அக்கறை கொண்ட இவ்வரசு கரும்பு சாகுபடி பரப்பை அதிகரிப்பதற்காகவும், சர்க்கரை ஆலைகளின் செயல்திறனை அதிகரித்து நலிவடைந்த நிலையில் இருந்து மீட்டெடுக்க பல்வேறு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அதன் ஒரு பகுதியாக கரும்பு விவசாயிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஒன்றிய அரசு அறிவிக்கும் கரும்பு விலைக்கு மேல் ஊக்கத்தொகை அறிவித்து வருகிறது. அரசு எடுத்து வரும் பல்வேறு நடவடிக்கைகளின் காரணமாக கரும்பு சாகுபடி பரப்பு அதிகரிப்பதுடன் சர்க்கரை ஆலைகளின் செயல்திறனும் அதிகரித்து வருகிறது.

கரும்புக்கு சிறப்பு ஊக்கத் தொகையாக ரூ.215 மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணையின்படி மாண்புமிகு வேளாண்மை-உழவர் நலத்துறை அமைச்சர் அவர்கள் 2024-25 ஆம் ஆண்டு வேளாண்மை நிதி நிலை அறிக்கையில், 2023-24 அரவைப்பருவத்தில் சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு டன்னுக்கு ரூ.215 சிறப்பு ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என்று அறிவித்தார்கள்.

ஒன்றிய அரசு 2023-24 ஆம் அரவைப்பருவத்திற்கு அறிவித்துள்ள நியாயமான மற்றும் ஆதாய விலையான (Fair and Remunerative Price) ரூ. 2919.75/-யைக் காட்டிலும் கூடுதலாக மாநில அரசின் சிறப்பு ஊக்கத் தொகையாக டன்னுக்கு ரூ.215 வழங்கிடும் வகையில், ரூ.247.00 கோடி நிதியினை மாநில நிதியிலிருந்து அரசு வழங்கி ஆணையிட்டுள்ளது.

அரசு வெளியிட்டுள்ள இந்த ஆணையின்படி, தமிழ்நாட்டில் இயங்கி வரும் இரண்டு பொதுத்துறை, 12 கூட்டுறவு மற்றும் 16 தனியார் சர்க்கரை ஆலைகளுக்கு 2023-24 அரவைப்பருவத்தில் கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு ஒன்றிய அரசு நிர்ணயித்துள்ள நியாயமான மற்றும் ஆதாய விலையான ரூ.2919.75 மற்றும் மாநில அரசின் சிறப்பு ஊக்கத்தொகையாக ரூ.215 யையும் சேர்த்து, டன் ஒன்றுக்கு ரூ.3134.75/- விவசாயிகள் பெறுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

2023-24 அரவைப்பருவத்தில் சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளின் விபரம் சேகரிக்கப்பட்டு, சர்க்கரைத்துறை இயக்குநரகத்தால் கூர்ந்தாய்வு செய்து, சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித்தலைவர்களின் தலைமையிலான மாவட்ட அளவிலான குழுவின் பரிந்துரையின்படி, தகுதியுள்ள விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது”, என அந்த அறிக்கையில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

unknown node

Tamil Government

unknown node

TN – Government