காஞ்சி பட்டு முதல் கடலை மிட்டாய் வரை… அரசியல் தலைவர்களுக்கு ஸ்டாலின் கொடுத்த பரிசு!!
தொகுதி மறுவரையறை தொடர்பான கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்தில் கலந்துகொள்ளும் விருந்தினர்களுக்கு, மகளிர் சுய உதவிக்குழுக்கள் தயாரித்த அழகிய பெட்டியில் அடுக்கப்பட்டு பரிசாக அளிக்கப்பட்டது.

சென்னை : சென்னையில் தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம் தொடங்கியது. கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, ஒடிசா மேற்குவங்கம் மற்றும் பஞ்சாப் ஆகிய 7 மாநிலங்களை சேர்ந்த முதலமைச்சர்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றுள்ள தலைவர்களுக்கு பொன்னாடை அணிவித்தும் பரிசு அளித்தும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு அளித்தார். பத்தமடை பாய், தோடர்களின் சால்வை, காஞ்சிபுரம் கைத்தறி பட்டுப்புடவை, ஊட்டி வர்க்கி, கன்னியாகுமரி கிராம்பு, கோவில்பட்டி கடலை மிட்டாய், ஈரோடு மஞ்சள், கொடைக்கானல் பூண்டு ஆகிய தமிழ்நாட்டின் சிறப்பு வாய்ந்த பொருட்கள் மகளிர் சுய உதவிக்குழுக்கள் தயாரித்த அழகிய பெட்டியில் அடுக்கப்பட்டு விருந்தினர்களுக்கு பரிசாக அளிக்கப்பட்டது.
#Delimitation கூட்டத்தில் பங்கேற்கும் அனைத்து தலைவர்களுக்கும்
தமிழ்நாட்டின் பாரம்பரியத்தை பறைச்சாற்றும் பொருட்களுடன் மகளிர் சுய உதவிக்குழுக்கள் தயாரித்த பொருட்களை
அழகிய பரிசு பெட்டகத்தில் வைத்து வழங்க
தமிழக அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது pic.twitter.com/UQSBvrcE6P— Pranesh. Vijay@2025 (@Praneshvjcbe) March 22, 2025
தமிழகத்தின் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தவிர இந்த தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்தில் முக்கியமாக, 7 மாநில தலைவர்களின் பெயர்கள் ஆங்கிலம் மற்றும் அவரவர்களின் தாய்மொழியில் பெயர்ப்பலகைகள் வைக்கப்பட்டிருந்தது.