ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிக்கும் கூட்டணி கட்சிகள்.! திமுக நிலைப்பாடு என்ன.?

Selvaperunthagai (Congress) - K Balakrishnan (CPIM) - Vaiko (MDMK)

சென்னை : சுதந்திர தினத்தன்று ஆளுநர் மாளிகையில் நடைபெறும் தேநீர் விருந்து நிகழ்வை காங்கிரஸ், கம்யூனிஸ்ட், மதிமுக, விசிக உள்ளிட்ட திமுக கூட்டணி கட்சிகள் புறக்கணித்துள்ள நிலையில், திமுகவின் நிலைபாடு என்ன என்பது கேள்விக் குறியாக உள்ளது.

வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி நாடு முழுவதும் 78-வது சுதந்திர தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. அந்த வகையில், தமிழக அரசு சார்பில் கொண்டாடப்படும் சுதந்திர தின விழா சென்னை ஜார்ஜ் கோட்டையில் வைத்து நடைபெறவுள்ளது. இதற்கான முன்னேற்பாட்டுப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், அன்று காலை அங்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மூவர்ணக் கொடியை ஏற்றி, வீர வணக்கம் செலுத்தவுள்ளார்.

அதனை தொடர்ந்து அரசு சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளன. இதனை தொடர்ந்து அன்று மாலை அரசியல் கட்சியினர், அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலருக்கு பாராட்டு தெரிவிக்கும் விதமாக ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அழைப்பும்.., புறக்கணிப்பும்…!

ஆண்டுதோறும் இந்த வழக்கம் கடைபிடிக்கப்படும் நிலையில், கடந்த ஆண்டு நடைபெற்ற தேனீர் விருந்து நிகழ்வில் திமுக மற்றும் திமுகவின் கூட்டணி கட்சிகள் பங்கேற்கவில்லை. மாநில அரசுக்கு எதிரான நிலைபாட்டுடன் ஆளுநர் ஆர்.என் ரவி செயல்படுகிறார் என்ற குற்றச்சாட்டை முன்வைத்த அரசியல் தலைவர்கள், அவருடனான அரசியல் உறவாடலில் ஆர்வம் இல்லை என்பதை வெளிப்படையாகவே தெரிவித்திருந்தனர்.

அந்த வகையில் இந்த ஆண்டும், திமுகவின் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், மதிமுக, விசிக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும், ஆளுநருக்கு எதிரான பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து, தேநீர் விருந்தில் பங்கேற்கப்போவது இல்லை என்ற முடிவை மேற்கொண்டுள்ளனர். இது குறித்து ஒவ்வொரு கட்சிகளை சேர்ந்த தலைவர்களும் கூறிய கருத்துக்கள் என்ன என்பதை பார்க்கலாம்.

தமிழக காங்கிரஸ் :

செல்வப்பெருந்தகை, தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் : “பதவிக்காலம் முடிந்த பின்னரும், ஆர்.என்.ரவி தமிழக ஆளுநர் பதவியில் தொடர்வது அரசியலமைப்புக்கு எதிரானது. தமிழக மக்களுக்கும், மாநில அரசுக்கும் எதிராக ஆளுநரின் செயல்பாடுகள் உள்ளது. இதனால் ஆளுநரின் தேநீர் விருந்தை தமிழக காங்கிரஸ் புறக்கணிறது” எனக்கூறியுள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் :

முத்தரசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர்,”தமிழக மக்களின் நலனுக்கு எதிராக ஆளுநர் ஆர்.என்.ரவி செயல்பட்டு வருகிறார். அதனால், ஆளுநர் மாளிகையில் நடைபெறும் தேநீர் விருந்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் புறக்கணிக்கிறோம்” என குறிப்பிட்டுள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் :

கே.பாலகிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர், “கூட்டாட்சி அரசியலமைப்பை மதிக்காத ஆணவப் போக்கு கொண்ட ஆளுநர் ஆர்.என்.ரவி பதவியில் நீடித்திருப்பது ஆளுநர் பதவிக்கு இழுக்கு. அவரோடு தேநீர் விருந்து என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதால், தேநீர் விருந்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிராகரிக்கிறது” என தெரிவித்துள்ளார்.

அதேபோல, மதிமுக, விசிக போன்ற திமுக கூட்டணி கட்சிகளும் ஆளுநர் மாளிகையில் நடைபெறும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன.

திமுகவின் நிலைப்பாடு என்ன?

திமுக கூட்டணி கட்சிகள் ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக அறிவித்துவிட்டாலும், மாநிலத்தில் ஆளும் கட்சியாக உள்ள திமுக இதுகுறித்து எந்தவித அறிவிப்பும் வெளியிடாமல் இருக்கிறது. ஆனால், கடந்த ஆண்டு (2023) இதேபோல் சுதந்திர தினத்தன்று ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற தேநீர் விருந்து நிகழ்வில் திமுக கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து கடந்த ஆண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், நீட் தேர்வுக்கு எதிரான மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காத காரணத்தால் தேநீர் விருந்து நிகழ்வை புறக்கணிக்கிறோம் என்று அறிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு அதுபோல் அறிக்கை எதுவும் வருகிறதா.? அல்லது தேநீர் விருந்தில் திமுக மட்டும் மாநில அரசு சார்பாக கலந்து கொள்கிறதா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்