நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு! மத்திய அமைச்சர் புதிய அறிவிப்பு!

நாடு முழுவதும் அடுத்ததாக மக்கள் தொகை கனக்கு எடுக்கப்படும் போது சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.

Featured image

டெல்லி: இன்று பிரதமர் மோடி தலைமையில் மதியாய் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் அரசியல் சார்ந்து பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக தெரிகிறது. அதில், முக்கியமாக சாதிவாரி கணக்கெடுப்பு எப்போது நடத்தப்படும் என மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.

இதுபற்றி மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் கூறுகையில், மக்கள் தொகை கணக்கெடுப்பு அடுத்ததாக நடத்தப்படும் போது நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படுவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என தெரிவித்தார். மக்கள் தொகை மற்றும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும் அதிகாரம் மத்திய அரசிடம் மட்டுமே உள்ளது என்றும், மாநில அரசுகள் நடத்தினால் அதில் சில குழப்பங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது என மத்திய அமைச்சர் கூறினார்.

மேலும், காங்கிரஸ் கட்சி எப்போதும் சாதிவாரி கணக்கெடுப்புக்கு எதிராகவே செயல்பட்டுள்ளது என்றும், இந்தியா கூட்டணி கட்சிகள் எப்போதும் சாதிவாரி கணக்கெடுப்பை தங்கள் அரசியல் லாபத்திற்காக மட்டுமே பயன்படுத்துகின்றனர் என்றும் மத்திய அமைச்சர் எதிர்க்கட்சிகள் மீது குற்றம்சாட்டினார்.

காங்கிரஸ் அரசாங்கம் எப்போதுமே சாதிவாரி கணக்கெடுப்பை எதிர்த்து தான் செயல்பட்டு வந்தன என்றும், 2010ஆம் ஆண்டில், மறைந்த டாக்டர் மன்மோகன் சிங் ஆட்சியில் இருக்கும் போது, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அமைச்சரவையில் உள்ள சிலர் பரிந்துரைத்தனர். பெரும்பாலான அரசியல் கட்சிகள் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என பரிந்துரைத்தன. இதுபோன்ற அழுத்தங்கள் உருவானதை அடுத்து காங்கிரஸ் அரசு சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த முடிவு செய்தது என்று அஷ்வினி வைஷ்ணவ் கூறினார்.

காங்கிரஸும் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சாதிவாரி கணக்கெடுப்பை ஒரு அரசியல் கருவியாக மட்டுமே பயன்படுத்தின என்பது நன்கு புரிந்து கொள்ளப்படுகிறது எனவும் மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். மக்கள் தொகை கணக்கெடுப்பு எப்போது நடத்தப்படும் என்ற விவரத்தை மத்திய அமைச்சர் குறிப்பிடவில்லை.