INDvBAN : நான் ‘கில்’லி டா! சதம் விளாசிய கில்! இந்தியா அசத்தல் வெற்றி!
சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 2வது ஆட்டத்தில் வங்கதேச அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தியுள்ளது.

துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 2வது ஆட்டத்தில் இந்தியா, வங்கதேசம் அணிகள் இன்று மோதின. துபாயில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. பேட்டிங்கை தொடங்கிய வங்கதேச அணி தொடக்கம் முதலே தொடர் இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது.
முதல் இன்னிங்ஸ் :
வங்கதேச அணியில் களமிறங்கிய சௌம்யா சர்க்கார், நஜ்முல் ஹுசைன், முஸ்தாபீர் ரஹீம், தன்சிம் ஹசன் சாஹிப் ஆகியோர் டக் அவுட் ஆகினர். மிராஜ் 5 ரன்களிலும், ஹாசன் 25 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். தவ்ஹித் ஹிரிடோய் நிலைத்து ஆடி சதம் விளாசினார். 118 பந்துகளில் 100 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். ஜாக்கர் அலி 68 ரன்களை எடுத்தார். ரிஷாத் ஹொசைன் 18 ரன்கள் எடுத்தார். இறுதியில் 49.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வங்கதேச அணி 228 ரன்கள் எடுத்திருந்தது. இந்திய அணி சார்பில் முகமது ஷமி சிறப்பாக பந்துவீசி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஹர்ஷித் ராணா 3 விக்கெட்டுகளையும் அக்சர் படேல் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்
இரண்டாவது இன்னிங்ஸ் :
இந்திய அணி 50 ஓவர்களில் 229 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய ரோஹித் சர்மா, சுப்மன் கில் ஆகியோர் நல்ல தொடக்கத்தை அளித்தனர். ரோஹித் சர்மா 41 ரன்கள் எடுத்து அவுட் ஆகி பெவிலியன் திரும்பினார். கில் இறுதிவரை களத்தில் நின்று 129 பந்துகளில் 101 ரன்கள் எடுத்தார்.
விராட் கோலி 22 ரன்களிலும், ஷ்ரேயஸ் ஐயர் 15 ரன்களிலும், அக்சர் படேல் 8 ரன்களிலும் அவுட் ஆகி வெளியேறினார். கே.எல்.ராகுல் (41 ரன்கள்), சுப்மன் கில் ஆகியோர் நிலைத்து ஆடி அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றனர். இறுதியாக 46.3 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 231 ரன்கள் எடுத்து வங்கதேச அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தியது. ஆட்டநாயகனாக சுப்மன் கில் தேர்வு செய்யப்பட்டார்.