சென்னை :தமிழ்நாடு அரசின் ‘தாயுமானவர் திட்டம்’ தேமுதிக மற்றும் விஜயகாந்திற்கு கிடைத்த வெற்றி என பிரேமலதா மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். தமிழக அரசின் தாயுமானவர் திட்டம், வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கு ரேஷன் பொருட்களை விநியோகிக்கும் திட்டமாகும். இது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் இன்று தொடங்கப்பட்டது.
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இத்திட்டத்தை “விஜயகாந்தின் கனவு திட்டம்” எனக் குறிப்பிட்டு, இது அவருக்கு கிடைத்த வெற்றி என்று பெருமிதம் தெரிவித்தார். கடந்த 2006 தேர்தலின்போது வீடு தேடி ரேஷன் பொருள்கள் வழங்கப்படும் என தேமுதிக தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.
அந்த திட்டத்தையே தற்போது தமிழ்நாடு அரசு முதற்கட்டமாக நிறைவேற்றியுள்ளதாக கூறிய பிரேமலதா, அன்று ஏளனமாக சிரித்தவர்கள் இன்று எங்கே போனார்கள் என கேள்வி எழுப்பியுள்ளார். இதற்காக முதல்வருக்கு நன்றி தெரிவித்த பிரேமலதா, இத்திட்டம் தமிழகத்தில் 21.7 லட்சம் பயனாளிகளுக்கு உதவும் என்று பாராட்டினார்.
