அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் சம்பளம் கிடையாது – தமிழக அரசு!

அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் வேலைநிறுத்தம் அறிவித்துள்ள நிலையில், அரசு ஊழியர்கள் பணிக்கு வராமல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டால், ஊதியம் கிடையாது என தமிழ்நாடு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

Govt Employees - Protest

சென்னை : தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபடுவதற்கு எதிராக தமிழ்நாடு அரசு கடுமையான நிலைப்பாட்டை எடுத்துள்ளது. குறிப்பாக, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் மார்ச் இன்று ஒரு நாள் வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்திருந்த நிலையில், இதற்கு பதிலடியாக தமிழ்நாடு அரசு ஒரு அதிரடி எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.

இதன்படி, பணிக்கு வராமல் வேலைநிறுத்தத்தில் பங்கேற்கும் ஊழியர்களுக்கு அந்த நாளுக்கான ஊதியம் வழங்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்கள் இன்று வேலைநிறுத்தம் அறிவித்திருந்தன.

இந்நிலையில், மருத்துவ விடுப்பைத் தவிர சாதாரண விடுப்போ, மற்ற விடுப்போ அரசு ஊழியர்கள் எடுக்கக் கூடாது. காலை 10.15 மணிக்குள் பணிக்கு வராதவர்களின் விவரங்களை சேகரிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதை மீறியும்
போராட்டத்தில் ஈடுபட்டால் ஒருநாள் ஊதியம் பிடிக்கப்படும் எனவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு ஊழியர்கள் கோரிக்கை

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் நீண்ட காலமாக பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர். முக்கியமாக, திமுக ஆட்சிக்கு வந்தபோது 2021 சட்டமன்றத் தேர்தலில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கை மையமாக கொண்டுள்ளது.

இதில், புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்பது முதன்மையான கோரிக்கையாக உள்ளது. மேலும், ஆண்டுக்கு 15 நாட்கள் விடுப்பு சரணடைவு திட்டத்தை மீண்டும் கொண்டுவருதல், பணிக்கொடை உயர்வு, காலிப் பணியிடங்களை நிரப்புதல் போன்றவையும் அவர்களின் கோரிக்கைகளில் அடங்கும்.

அரசு ஊழியர்கள் போராட்டம்

மேலே குறிப்பிட்ட கோரிக்கைகள் நிறைவேறாததால், ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்கள் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றன. அண்மையில், பிப்ரவரி 25ம் தேதி அன்று நடைபெற்ற தற்செயல் விடுப்பு போராட்டத்தில் ஏராளமான ஊழியர்கள் பங்கேற்றனர்.

இதனால் அரசு அலுவலகப் பணிகள் பாதிக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து, நடந்து முடிந்த தமிழ்நாடு பட்ஜெட்டில் (மார்ச் 2025) தங்கள் கோரிக்கைகளுக்கு தீர்வு காணப்படவில்லை என்று கூறி, இன்று (மார்ச் 19) மீண்டும் வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்