மதுரை :திருச்சி மாவட்டம் துறையூரில் நடைபெற்ற அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி (ஈபிஎஸ்) பங்கேற்ற “மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம்” என்ற பரப்புரைக் கூட்டத்தில், ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மற்றும் ஊழியர் தாக்கப்பட்ட விவகாரத்தில், மதுரை உயர்நீதிமன்ற அமர்வு பரபரப்பு உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதன்படி, அவசர ஊர்திகளான ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்களுக்கு அனைவரும் வழிவிட வேண்டும் என்று மதுரை உயர் நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு, பொது மக்களின் பாதுகாப்பையும், உயிர்காக்கும் சேவைகளின் தடையற்ற இயக்கத்தையும் உறுதி செய்யும் நோக்கத்தில் பிறப்பிக்கப்பட்டது.
108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு பாதுகாப்பு அளிக்க உத்தரவிட வேண்டுமென பொதுநல வழக்கு தாக்கல் செய்த நிலையில், உயர் நீதிமன்ற மதுரைக் கிளை டி.ஜி.பி.க்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. அந்த உத்தரவின்படி, இனிமேல், பொதுக் கூட்டங்களில், மக்கள் அதிகமாக இருந்தாலும் ஆம்புலன்ஸ்க்கு வழிவிட வேண்டும்.
அனைத்து 108 ஆம்புலன்ஸ் டிரைவர்களுக்கும் போலீஸ் பாதுகாப்பு வழங்குவது சாத்தியமா? என்றும், ஆம்புலன்ஸ்க்கு வழி விடாமல் வழிமறித்து தாக்கினால் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதிகள் அனிதா சுமந்த், மற்றும் குமரப்பன் அமர்வு உத்தரவிட்டுள்ளது. அதிமுக கூட்டத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் தாக்கப்பட்ட விவகாரத்தில் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது.
