சென்னை :மூன்று நாட்கள் இடைவெளிக்குப் பிறகு, நேற்று சட்டப்பேரவை கூடிய நிலையில், பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை தொடர்பான பட்ஜெட் ஒதுக்கீடுகள் மற்றும் திட்டங்கள் குறித்து விரிவான விவாதம் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து இன்று கூடிய சட்டப்பேரவையில், முதல்வர் மு.க. ஸ்டாலின், கச்சத்தீவை திரும்பப் பெற ஒன்றிய அரசை வலியுறுத்தி தமிழ்நாடு சட்டப்பேரவையில் தனித் தீர்மானம் கொண்டு வந்தார்.
தீர்மானத்தை முன்மொழிந்து அவையில் பேசிய அவர், இலங்கை அரசிடம் தவிக்கும் மீனவர்கள், படகுகளை நல்லெண்ண அடிப்படையில் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். இலங்கை செல்லும் பிரதமர் மோடி அந்நாட்டு பிரதமருடன் இந்த விவகாரம் தொடர்பாக பேச வேண்டும் என்றும் ஸ்டாலின் தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் கொண்டுவந்த தனித் தீர்மானத்திற்கு பாஜக ஆதரவு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அவையில் பேசிய வானதி சீனிவாசன், மத்திய அரசு மீனவர்கள் அனைவரையும் இந்திய குடிமக்களாகவே பார்க்கிறது எனக் குறிப்பிட்டார். கச்சத்தீவு தாரைவார்க்கப்பட்டது முதல், அது தவறு என பாஜக கூறி வருவதாகவும், வரலாற்று பிழையை சரிசெய்ய பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் எனவும் வானதி தெரிவித்தார்.
கச்சத்தீவை மீட்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்கக்கோரி பேரவையில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை நாடகம் என அண்ணாமலை விமர்சனம் செய்த சில நிமிடங்களிலேயே வானதி சீனிவாசன் ஆதரவு தெரிவித்திருக்கிறார். அதன்படி, தேர்தல் நேரத்தில் மட்டும் கச்சத்தீவு மீட்போம் என கபட நாடகம் ஆடுகிறார். முதலமைச்சரின் இன்றைய நாடகம் கச்சத்தீவு மீட்புத் தீர்மானம் என அண்ணாமலை சமூக வலைதளத்தில் விமர்சனம் செயதிருக்கிறார்.
unknown node