“வேண்டவே வேண்டாம்” 100லி. கழிவுநீரில் 94 லி. நல்ல நீர்! – அமைச்சர் கே.என்.நேரு ஆதங்கம்!
சிங்கப்பூரில் கழிவு நீரில் இருந்து சுத்திகரிப்பு செய்யப்படும் நீரைத்தான் மக்கள் குடிக்கிறார்கள் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

சென்னை : தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதை தொடர்ந்து தற்போது சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் தொடர்பான காரசார விவாதமானது நடைபெற்று வருகிறது. அப்படி தான் இன்று நடைபெற்ற தமிழ்நாடு சட்டப்பேரவையில் அமைச்சர் கே.என்.நேரு கழிவுநீரை குடிநீராக மாற்றுவது தொடர்பாக சில விஷயங்களை பற்றி பேசியிருக்கிறார்.
இது குறித்து பேசிய அமைச்சர் கே.என்.நேரு ” தமிழ்நாட்டில் கழிவுநீரை மறுசுழற்சி செய்து குடிநீராக மாற்றும் திட்டம் சிங்கப்பூர் போன்ற நாடுகளில் செயல்படுத்தப்படும் முறையைப் பின்பற்றி, தமிழ்நாட்டில் நீர் பற்றாக்குறையை சமாளிக்க முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.சிங்கப்பூர் போன்ற நாடுகளை எடுத்துக்கொண்டோம் என்றால் கழிவு நீரில் இருந்து சுத்திகரிப்பு செய்யப்படும் நீரைத்தான் மக்கள் குடிக்கிறார்கள். ஆனால், நம் மக்கள் அது வேண்டவே வேண்டாம் என்று சொல்கிறார்கள்.
100 லிட்டர் கழிவு நீரை சுத்திகரிப்பு செய்தோம் என்றால் 6 லிட்டர் கழிவு நீர் போக, 94 லிட்டர் நல்ல நீர் கிடைக்கும். சுத்திகரிக்கப்பட்ட நீரை விவசாயம் அல்லது ஆற்றில் விடலாமா என்பது குறித்து மக்களின் விருப்பத்திற்கு ஏற்பதான் முடிவு செய்யப்படுகிறது” எனவும் அமைச்சர் கே.என்.நேரு பேசியுள்ளார்.
மேலும், சிங்கப்பூரில் இது போன்ற நடைமுறை இருக்கிறது என்று கேட்டால் இருக்கிறது. NEWater என்ற முறை 2003-ஆம் ஆண்டு முதல் உள்ளது. இது கழிவுநீரை மைக்ரோஃபில்ட்ரேஷன், ரிவர்ஸ் ஆஸ்மாஸிஸ், UV சுத்திகரிப்பு மூலம் குடிநீராக மாற்றுகிறது.அதுமட்டுமின்றி இது 30% நீர் தேவையை பூர்த்தி செய்கிறது எனவே, அதனை குறிப்பிட்டு தான் விவசாயம் மற்றும் சமையல் உள்ளிட்ட பல தேவைகளுக்கு இந்த மறுசுழற்சி செய்யப்பட்ட நீரை பயன்படுத்தலாம் என்று அமைச்சர் பேசியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.