வயநாடு நிலச்சரிவு தேசிய பேரிடராக அறிவிக்கப்படுமா.? விதிமுறைகள் என்னென்ன.?

Wayanad Landslide

வயநாடு : கேரள மாநிலம் வயநாட்டில் சூரல்மலை, மேப்பாடி, முண்டக்கை ஆகிய பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவு சம்பவங்கள் நாட்டையே உலுக்கியது. இந்த நிலச்சரிவில் இதுவரை 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இன்னும் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

தேசிய மீட்பு படையினர், இந்திய ராணுவம், மாநில மீட்புப்படையினர் ஆகியோரும் தமிழகம் உள்ளிட்ட மற்ற மாநில மீட்பு படையினரும் இன்னும் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். பல இடங்களில் அடுக்குமாடி வீடுகள் இருந்த இடம் தெரியாமல் மண்ணில் புதைந்து உள்ளன.

நாடாளுமன்றத்தில் கோரிக்கை :

இப்படியான பேரழிவு நிகழ்ந்துள்ள வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என பாராளுமன்றத்தில் எதிர்கட்சியினர் தொடர் கோரிக்கை வைத்து வருகின்றனர். இது குறித்து எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி நேற்று நாடாளுமன்றத்தில் பேசுகையில், வயநாடு நிலச்சரிவு பேரழிவை உண்டாக்கி உள்ளது. அதனை தேசிய பேரிடராக அறிவித்து நிவாரண தொகையையும் அதிகரித்து வழங்க வேண்டும் என்று கூறினார்.

ராகுல் காந்தி கோரிக்கை :

மேலும் அவர் கூறுகையில், வயநாடு உள்கட்டமைப்புகள் பெருமளவில் சேதமடைந்துள்ளன. வயநாடு நிலச்சரிவை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டியது அவசியமான ஒன்றாகும். பாதிக்கப்பட்ட மக்களின் மறுவாழ்வுக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இயற்கை பேரிடரைத் தாங்கும் வகையில் வயநாடு உள்கட்டமைப்பு அமைய வேண்டும். உயிரிழந்தோா் குடும்பங்களுக்கான நிவாரணத் தொகையையும் உயா்த்தி வழங்க வேண்டும் என்று நேற்று நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தினார்.

தேசிய பேரிடர் மேலாண்மை :

தேசிய பேரிடர் என்பது, இயற்கை சீற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு வகையில் பெருமளவு மக்கள் பாதிக்கப்படும் நிகழ்வு என வரையறுக்கப்பட்டு தேசிய பேரிடர் மேலாண்மை அமைப்பு என்று 1999இல் தொடங்கப்பட்டது. ஆனால், அது அப்போது அனைத்து மாநிலத்திற்கும் பொதுவான தேசிய சட்டமாக இயற்றப்படவில்லை.

சுனாமிக்கு பிறகு…

2004இல் சுனாமி என்ற பேரழிவு நிகழ்ந்த பிறகு தான் தேசிய பேரிடர் மேலாண்மை சட்டம் உருவானது. அதன் பிறகு 2005இல் தேசிய பேரிடர் மேலாண்மை சட்டம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த சட்டம் 2006, ஜனவரி 9ஆம் தேதி நாடு முழுக்க அமலுக்கு வந்தது. நாடு முழுவதும் குறிப்பிட்ட மாநிலங்களில் தேசிய பேரிடர் மேலாண்மை மீட்பு குழு உள்ளது.

இந்த தேசிய பேரிடர் மேலாண்மை வாரியத்தின் குழு தலைவராக நாட்டின் பிரதமர் உள்ளார். இதற்கு நிதியானது பான் மசாலா நிறுவனங்கள்,  சிகரெட் நிறுவனங்கள் என உடலுக்கு தீங்கு விளைவிக்கும் நிறுவனங்களில் வரி வசூல் செய்து அதன் ஓர் பகுதி தேசிய பேரிடர் மேலாண்மை வாரியத்திற்கு ஒதுக்கப்படுகிறது. இதுபோக மற்ற யார் வேண்டுமானாலும் ,  எந்த அமைப்பும் தேசிய பேரிடர் மேலாண்மை வாரியத்திற்கு நிதி அளிக்கலாம்.

மத்திய அரசுக்கே அதிகாரம் :

நாட்டில் நடத்த பேரழிவை ,  அதிக்கப்படியான உயிரிழப்பு, பொருள் இழப்பு நிகழ்வுகளை பேரிடராக அறிவிக்க குறிப்பிட்ட விதிமுறை எதுவும் வகுக்கப்படவில்லை. எதனை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்ற அதிகாரம் மத்திய அரசிடம் தான் உள்ளது . அதனால் தான் பாதிக்கப்பட்ட மாநிலங்கள் மத்திய அரசிடம் பேரிடர் குறித்த கோரிக்கைகளை முன்வைக்கின்றனர்.

பேரிடராக அறிவிக்கப்பட்டால்…

அவ்வாறு தேசிய பேரிடராக ஒரு பேரழிவு அறிவிக்கப்பட்டுவிட்டால், அதனை ஈடுசெய்ய தேவைப்படும் முழு நிதியையும் தேசிய பேரிடர் மேலாண்மை வாரிய நிதியில் இருந்து மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும். அப்படி அறிவிக்கவில்லை என்றால் ,  வழக்கம் போல தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து குறிப்பிட்ட தொகையும் ,  மாநில பேரிடர் நிதியில் இருந்து குறிப்பிட்ட தொகையும் அளிக்கப்படும்.

வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவித்தால், அனைத்து மீட்பு செலவுகளையும் தேசிய பேரிடர் மேலாண்மை வாரியத்தின் மூலம் மத்திய அரசு ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலை வரும்.

தமிழக கனமழை பாதிப்புகள் :

இதேபோல தான் , தமிழகத்தில் கடந்த ஆண்டு, சென்னை, காஞ்சிபுரம்,திருவள்ளூர் ,  செங்கல்பட்டு மற்றும் ,  நெல்லை ,  தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் ஏற்பட்ட பெரு வெள்ள பாதிப்பையும் தேசிய பேரிடராக அறிவிக்க தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தியது. ஆனால் , மத்திய அரசு கனமழை பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க மறுப்பு தெரிவித்துவிட்டது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்