தேசிய கொடி அவமதிப்பு: ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் – அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்

Default Image

டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடி அவமதிக்கப்பட்டதை ஒருபோதும் சகித்துக்கொள்ள முடியாது என அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார்.

புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி 40க்கும் மேற்பட்ட விவசாய அமைப்புகள் டெல்லியில் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனிடையே, குடியரசு தினத்தன்று விவசாயிகள் டிராக்டர் பேரணியை மேற்கொண்டனர். இந்த பேரணி அனுமதித்த நேரத்திற்கு முன்பே தொடங்கியதால், காவல்துறையினர் கண்ணீர் புகைக்குண்டு வீசி கூட்டத்தை கலைக்க முயற்சி செய்தனர்.

இதனால் விவசாயிகளுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு, தடியடி நடத்தப்பட்டது. பின்னர் விவசாயிகள் செங்கோட்டையை முற்றிகையிட்டு, தேசிய கொடி பறந்த கம்பத்தில், விவசாய கொடியை ஏறினர். இதன்பின் வன்முறை தீவிரமடைந்தது. கொடிக்கம்பத்தில் ஏறி விவசாய கொடியை ஏற்றியது, அதுவும் குடியரசு தினத்தன்று நடந்த சம்பவத்தால் நாடு முழுவதும் அதிர்ச்சியை அளித்தது.

இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியபோது, டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடி இழிவுபடுத்தப்பட்டதை இந்தியா சகித்துக் கொள்ளாது. பஞ்சாபில் இருந்து டிராக்டர் பேரணியில் கலந்துகொண்டவர்கள் குண்டர்கள் என்றும் அவர்களை அம்மாநில காங்கிரஸ் அரசு முன்கூட்டியே கைது செய்யாதது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், விவசாயிகளின் போராட்டத்தை காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி ஆதரித்தது மட்டும் இல்லாமல் அவர்களை தூண்டிவிட்டுள்ளார். இதனால் அவர் நாட்டு மக்களிடையே மன்னிப்பு கோர வேண்டும். தேசிய கொடி அவமதிக்கப்பட்டதை ஒருபோதும் சகித்துக்கொள்ள முடியாது. குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இந்த சம்பவத்தில் தொடர்புடைய பஞ்சாப் நடிகர் தீப் சிங் சித்து பாஜகவை சேர்ந்தவர் என்று கூறுவது அப்பட்டமான பொய் என்று குறிப்பிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்