ம.பி. எம்.பி.யாக போட்டியின்றி தேர்வாகும் மத்திய அமைச்சர் எல்.முருகன்..!

Union Minister L. Murugan is likely to contest from Madhya Pradesh for the state assembly elections without contest.

மத்திய அமைச்சர் எல்.முருகன் அவர்கள்,மத்திய பிரதேசத்தில் இருந்து, மாநிலங்களவைக்கு போட்டியின்றி தேர்வாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்தில் பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை விரிவாக்கம் செய்தபோது, தமிழக பாஜக தலைவராக இருந்த எல் முருகனுக்கு மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை மற்றும் பால்வள இணை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.

எனினும்,அவர் எம்.பி.யாக இல்லாத காரணத்தினால், 6 மாதத்திற்குள் நாடாளுமன்றத்தின் இரு அவைகளில் ஒன்றில் எம்.பி.யாக வேண்டும்.

இந்த சமயத்தில்,மத்திய பிரதேச மாநிலத்தில் காலியாக உள்ள மாநிலங்களவை இடத்திற்கு அக்டோபர் 4 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.இதனால்,மத்திய பிரதேச மாநிலத்தில் காலியாக உள்ள மாநிலங்களவை இடத்திற்கு போட்டியிடும் வேட்பாளர்கள் பெயர்களை பாஜக தலைமை அறிவித்தது. அதில், மாநிலங்களவை பதவிக்கான வேட்பாளராக எல்.முருகன் போட்டியிடுகிறார் என்று பாஜக தலைமை அறிவித்தது.

ஆனால்,அவரை எதிர்த்து போட்டியிட எதிர்க்கட்சியான காங்கிரஸ்,தனது கட்சி சார்பில் வேட்பாளரை நிறுத்தவில்லை என தெரிவித்துள்ளது..இது தொடர்பாக, மத்திய பிரதேச மாநில காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பூபேந்திர குப்தா நேற்று கூறுகையில்:”மாநிலங்களவை தேர்தலில் நாங்கள் வேட்பாளரை களம் இறக்கவில்லை. மாநில காங்கிரஸ் தலைவரும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான கமல்நாத், மாநிலங்களவை இடைத்தேர்தலில் வேட்பாளரை நிறுத்துவது இல்லை என்று முடிவு எடுத்துள்ளார்”, என்று தெரிவித்தார்.

இதன்காரணமாக,மாநிலங்களவை இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளரை நிறுத்தாததால் எல்.முருகன், மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு போட்டியின்றி எளிதில் வெற்றி பெரும் வாய்ப்பு இருப்பதாக பாஜக மூத்த தலைவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

மேலும், வேட்பு மனுக்களை திரும்பப்பெறுவதற்கு 27-ந் தேதி கடைசி நாள் என்பதால் அதற்கு பிறகு எல்.முருகன் போட்டியின்றி தேர்வு பெறுவதை தேர்தல் கமிஷன் முறைப்படி அறிவிக்கும் எனக் கூறப்படுகிறது.மத்திய பிரதேச மாநிலத்தில் ஆளும் பா.ஜ.க.வுக்கு 125 எம்.எல்.ஏ.க்களும், காங்கிரஸ் கட்சிக்கு 95 எம்.எல்.ஏ.க்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.