"தமிழக அரசை இப்போது குறை கூற முடியாது" – பாஜக மாநில தலைவர் அண்ணாமலை!

"Tamil Nadu government cannot be blamed now" - BJP state leader Annamalai!

சென்னை:போர்க்கால அடிப்படையில் அரசு நடவடிக்கை எடுத்து மீட்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

வடகிழக்கு பருவமழையால் சென்னை முழுக்க மழைநீரால் மிதந்து கொண்டிருக்கிறது.இதனையடுத்து,மழை நீரை வெளியேற்றும் பணிகளில் மாநகராட்சி தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.இதற்கிடையில்,தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு கடந்த 3 நாட்களாக சென்று நிவாரணப் பொருட்களை மக்களுக்கு வழங்கினர்.அதேபோல,எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று பார்வையிட்டு,மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கினார்.

இந்நிலையில்,சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக அலுவலகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ ‘பிரதமர் மோடி கிச்சன்’, நேற்று தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.இதனையடுத்து,செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறுகையில்:

“பாதிக்கப்பட்ட மக்களுக்கு சேவை செய்வதில் பாஜக தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது.அந்த வகையில்,மழையால் மக்களுக்கு உதவ சிறப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளோம்.அதே சமயம்,இந்த மழைக்காலங்களில் தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்களை குறை கூற முடியாது. ஏனெனில்,அவர்கள் தீவிரமாக மக்களுக்கான பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

எனினும்,பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் கொடுக்க வேண்டியது மாநில அரசின் கடமையாக இருக்கிறது.இதனால்,வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வெளியே செல்ல முடியாமல் தவிக்கும்மக்களுக்கு உடனடி நிவாரணமாக ரூ.5 ஆயிரம் கொடுக்க வேண்டும்.மேலும்,சென்னையில் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து மீட்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்”,என்று கூறினார்.

இதனைத் தொடர்ந்து,கொளத்தூரில் மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளில் படகில் சென்று அண்ணாமலை பார்வையிட்டு,மக்களைச் சந்தித்து குறைகளைக் கேட்டறிந்தார்.