தடுப்பு காவலில் பிரியங்கா காந்தி;மொபைல் இணைய சேவைகள் நிறுத்தம்..!

Priyanka Gandhi in custody; Mobile internet services shut down ..!

பிரியங்கா காந்தி தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருக்கும் சீதாபூரில் மொபைல் இணைய சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலத்தின் லக்கிம்பூர் வன்முறை சம்பவத்தில் விவசாயிகள் போராட்டத்தில் மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா அவர்களின் மகனுடைய கார் மோதியதில் 4 பேர் மற்றும் கலவரத்தில் என மொத்தம் 9 பேர் உயிரிழந்தனர்.இதற்கு நாடு முழுவதும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன.இதனால்,விவசாயிகளின் குடும்பத்தை நேரில் சந்திக்க அரசியல் தலைவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டும் வருகிறது.

இதனைத் தொடர்ந்து,கடந்த இரு தினங்களுக்கு முன்னர் விவசாயிகளை சந்திக்க லக்கிம்பூர் சென்ற காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி காவல்துறையால் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டார்.தற்போது அவர் போலீஸ் காவலில் உள்ளார். இதனையடுத்து,அமைதியை சீர்குலைக்கும் வகையில் செயல்பட்டதாக பிரியங்கா காந்தி உள்ளிட்ட 11 பேர் மீது உத்தரப்பிரதேச போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இதனைத் தொடர்ந்து,பிரியங்கா காந்தி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், பிரதமர் அவர்களே…உங்கள் அரசு என்னை கடந்த 28 மணி நேரமாக எந்த உத்தரவோ, வழக்குப் பதிவோ இல்லாமல் தடுத்துவைத்துள்ளது என பதிவிட்டு, விவசாயிகள் போராட்டத்தில் கார் புகுந்த வீடியோவை வெளியிட்டு ட்வீட் செய்தார்.காவலில் இருந்தாலும்,அவர் ட்விட்டர் போன்ற சமூக ஊடகங்களை பயன்படுத்தி வருகிறார்.

இந்நிலையில்,கடந்த திங்கள் கிழமை முதல் பிரியங்கா காந்தி தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருக்கும் சீதாபூரில் மொபைல் இணைய சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கிடையில்,இன்று லக்கிம்பூர் செல்ல இருந்த காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி அவர்களுக்கும் உத்தரப்பிரதேச அரசு அனுமதி மறுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.