பாஜகவில் இணைந்த திமுக முன்னாள் எம்எல்ஏ.., சுயமரியாதையை விரும்புபவர்கள் பாஜகவிற்கு வாருங்கள் – சிடி ரவி அழைப்பு

Former MLA AG Sampath, who left the DMK, has joined the BJP in the presence of CT Ravi.

திமுகவிலிருந்து விலகிய முன்னாள் எம்எல்ஏ ஏ.ஜி.சம்பத், சிடி ரவி முன்னிலையில் பாஜகவில் இணைந்துள்ளார்.

விழுப்புரம் மாவட்ட முன்னாள் திமுக செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான ஏ.ஜி.சம்பத் திமுகவிலிருந்து விலகுவதாக தெரிவித்திருந்தார். இதுகுறித்து பேசிய அவர், 21 ஆண்டுகளாக கட்சியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. என் தந்தைக்கு மணிமண்டபம் கட்டுவதாக வாக்குறுதி அளித்தனர். ஆனால், தற்போதைய திமுக தேர்தல் அறிக்கையில் இதுகுறித்துச் சொல்லப்படவில்லை என குற்றசாட்டினார்.

மேலும், வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கியதை குறித்து விமர்சித்து வருகின்றனர். இதனால் என் சுயமரியாதையைக் காப்பாற்றிக் கொள்ள பாஜகவில் இணைகிறேன் என்று ஏ.ஜி.சம்பத் தெரிவித்தாக கூறப்பட்டது. இந்த நிலையில், திமுகவிலிருந்து விலகிய முன்னாள் எம்எல்ஏ ஏ.ஜி.சம்பத், சென்னையில் சிடி ரவி முன்னிலையில் பாஜகவில் இணைந்துள்ளார்.

இதன்பின் பேசிய, தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் சிடி ரவி, சுயமரியாதையை விரும்புபவர்கள் பாஜகவிற்கு வாருங்கள் என அழைப்பு விடுத்துள்ளார். அதிமுக – பாஜக கூட்டணிக்கு சாதகமான சூழல் உள்ளதால் மீண்டும் தமிழகத்தில் மாபெரும் வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் என்றும் தெரிவித்துள்ளார். திமுகவிற்கு உதயசூரியன் சின்னத்தை வழங்கிய முன்னாள் அமைச்சர் ஏ.கோவிந்தசாமியின் மகன் ஏ.ஜி.சம்பத் என்பது குறிப்பிடப்படுகிறது.