#Breaking:"அம்மா உணவகம் மூடப்படாது,பயிர் பாதிப்பிற்கு ரூ.132 கோடி நிவாரணம்"- முதல்வர் அறிவிப்பு!

#Breaking: "Amma unavagam will not be closed, Rs 132 relief for crop damage" - Chief Minister announced.

சென்னை:அம்மா உணவகம் மூடப்படாது என்றும்,பயிர் பாதிப்பிற்கு ரூ.132 கோடி நிவாரணம் வழங்கப்படும் என்றும் சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் உறுதி அளித்துள்ளார்.

தமிழக சட்டபேரவை கூட்டத்தொடரின் 3 வது மற்றும் கடைசி நாள் கூட்டமானது சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்று வருகிறது.அதன்படி,இன்று காலை தொடங்கிய பேரவை கூட்டத்தில் அதிமுக ஆட்சியில் கடந்த 2018 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட கூட்டுறவு சங்கங்கள் தேர்தலை ரத்து செய்வதற்கான மசோதாவை பேரவையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தாக்கல் செய்தார்.

ஆனால்,சட்டப்பேரவையில் கூட்டுறவு சங்கங்கள் சட்டத் திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக வெளிநடப்பு செய்துள்ளது.இதற்கிடையில்,அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அம்மா மினி கிளினிக்குகளை மூடியுள்ளனர்.அம்மா உணவகம் முன்னோடி திட்டமாக உள்ளது.இந்த நிலையில்,அதை மூடினால் என்ன என்று அமைச்சர் துரைமுருகன் பேசியது வேதனை அளிக்கிறது என்று எடப்பாடி பழனிசாமி கூறியிருந்தார்.

இதனையடுத்து,சட்டப்பேரவையில், சென்னை மாநகர காவல் சட்ட முன்வடிவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்தார். அதன்பின்னர்,சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலுரை அளித்து வருகிறார்.

அந்த வகையில் பேசி வரும் முதல்வர்:”ஆளுநர் உரை மிகுந்த கவனத்துடன் தயாரிக்கப்பட்டது என்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு தனிப்பட்ட முறையிலும்,அரசு சார்பிலும் மனமார்ந்த நன்றி.கொரோனா தொற்று காரணமாக எல்லா உறுப்பினர்களுக்கும் பேச வாய்ப்பளிக்க இயலவில்லை”,என்று கூறினார்.

அதன்பின்னர்,”திண்டுக்கல்,தேனி,திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் போக்சோ நீதிமன்றங்கள் அமைக்கப்படுகின்றன.தமிழகத்தில் மழையால் பாதிக்கப்பட்ட 1.62 லட்சம் ஹெக்டேர் பயிர் பாதிப்பிற்கு ரூ.132.12 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.இந்த நிதி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் இரண்டொரு நாட்களில் வரவு வைக்கப்படும்.

மேலும்,நீட் தேர்வு விலக்குக்கு ஆதரவளிக்கும் அதிமுகவிற்கு நன்றி.அம்மா உணவகம் மூடகூடாது என்பதே எனது எண்ணம்,அந்த முடிவில் எந்த மாற்றமும் இல்லை. எனவே,அம்மா உணவகம் மூடப்படாது என்பதை எதிர்க்கட்சி தலைவருக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.மேலும்,மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் நினைவிடம் பொதுப்பணித்துறையால் பராமரிக்கப்பட்டு வருகிறது.அதிமுக ஆட்சியில் முந்தைய திமுக அரசின் திட்டங்கள் புறக்கணிப்பட்டது போன்று,திமுக அரசு செயல்படாது”,என்று தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து,பேசிய முதல்வர்:”தமிழகத்தில் இதுவரை 8.76 கோடி கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.திமுக ஆட்சிக்கு வந்த பின் கொரோனா தடுப்பூசி செலுத்தும் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு உள்ளது”,என்றும் தெரிவித்துள்ளார்.