ஜெயலலிதா மரணம் தொடர்பாக 90% விசாரணை முடிந்துவிட்டது – ஆறுமுகச்சாமி ஆணையம் தரப்பு

The Arumugasami Commission has said that the probe into the death of the late Chief Minister Jayalalithaa is 90% complete.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை 90% ஏற்கனவே முடிந்துவிட்டது என்று ஆறுமுகசாமி ஆணையம் தரப்பில் பதில்.

ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக புகார்கள் எழுந்த நிலையில், 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் 25-ஆம் தேதி ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. மூன்று மாதங்களுக்குள் விசாரணையை முடித்து அறிக்கையை தாக்கல் செய்ய அப்போது கூறப்பட்டது.

ஆனால், ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை குறிப்பிட்ட கால கெடுவுக்குள் நடைபெறவில்லை. இதுவரை 10 முறை ஆறுமுகசாமி ஆணையத்துக்கு கால நீட்டிப்பு செய்யப்பட்டது. இதனிடையே, அப்போலோ மருத்துவமனை நிர்வாகம், முதலில் ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்குத் தடை விதிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

அதனை விசாரித்த நீதிமன்றம், தடை விதிக்க மறுத்துவிட்டது. அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அப்போலோ நிர்வாகம் கடந்த 2019 ஏப்ரல் மாதம் மேல்முறையீடு செய்தது. இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஆறுமுகசாமி ஆணையத்துக்குத் தடை விதித்திருந்தது.

இந்த நிலையில், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பான இறுதி  விசாரணை அறிக்கையை தாக்கல் செய்யகோரிய மனு மீதான விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வந்தபோது, விசாரணை 90% ஏற்கனவே முடிந்துவிட்டது என்று ஆறுமுகசாமி ஆணையம் தரப்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து இந்த வழக்கு ஆகஸ்ட் 25ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வர உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.