சென்னை :இன்று சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற ‘உலக மகளிர் தின விழாவில், சென்னை மாநகரத்தில் பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்திடும் விதமாகவும், பெண்களுக்கான சுயதொழில் வேலைவாய்ப்பினை உருவாக்கிடும் விதமாகவும், பெண் ஆட்டோ ஓட்டுநர்களால் இயக்கப்படும் பிங்க் ஆட்டோ உட்பட 250 ஆட்டோக்களை கொடியசைத்து துவக்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
அதன்படி, பெண்களுக்காக 100 பிங்க் ஆட்டோக்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக நீல நிற ஆட்டோக்கள், உடன் மஞ்சள் நிற ஆட்டோக்கள் என மொத்தம் 250 ஆட்டோக்களை தமிழக அரசு வழங்கியுள்ளது.
unknown nodeமுதற்கட்டமாக 250 பெண் ஓட்டுநர்கள் தேர்வு செய்யப்பட்டு தலா ரூ.1 லட்சம் மானியமும் வழங்கப்பட்டுகிறது. ஆட்டோ ஓட்டும் பெண்களுக்கு இரண்டு மாதம் பயிற்சி மேற்கொள்ள வேண்டும். 25 வயது முதல் 45 வயது வரையிலான பெண்கள் விண்ணப்பிக்கலாம்.
இந்த திட்டத்தின் மூலம், பயணங்களின்போது பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, இந்த பிங்க் நிற ஆட்டோக்களில் பெண்களின் பாதுகாப்பிற்காக மகளிர் காவல் நிலையங்களுடன் தொடர்பு கொள்ளும் வகையில் ஜிபிஎஸ் கருவி, மகளிர் உதவி எண்கள் உள்ளிட்ட வசதிகள் இடம் பெற்றுள்ளன. அதுமட்டுமின்றி, பெண்களுக்காக நாப்கின் மற்றும் சானிடைசர் வைக்கப்பட்டுள்ளது.
மேலும், பெண்களே இயக்கும் இந்த ஆட்டோக்களில் ஜிபிஎஸ் மற்றும் VItd device எனப்படும் வாகன கண்காணிப்பு சாதனம் பொருத்தப்பட்டிருக்கும். இதன் மூலம் காவல் துறையால் எளிதாகக் கண்காணிக்கப்படும். இந்த ஆட்டோவில் ஒருபுறம் சிஎன்ஜி எரிவாயு கலன், அதன் மறுபுறம் பெட்ரோல் கலன் என இரண்டு வகையான எரிபொருள் வசதிகளுடன் இயங்குமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.
