மதுரை :தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் இன்று நடைபெறுகிறது. இந்த மாநாட்டிற்கு தொண்டர்கள் அதிகாலை முதலே படையெடுத்து மாநாட்டு மேடைக்கு முன்பாக குவிந்துள்ளனர். விடியற்காலையில் சுமார் 20,000-க்கும் மேற்பட்ட தொண்டர்கள் மாநாட்டு இடத்தில் திரண்டதாகவும், வெளியூர்களில் இருந்து வருகை தந்தவர்கள் ஆரவாரத்துடன் இடம் பிடித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மாநாட்டிற்கு ஒன்றரை லட்சம் இருக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன, மேலும் தொண்டர்கள் தலைவர் விஜய்யை அருகில் பார்க்கும் உற்சாகத்தில் காலையிலேயே களத்தை நிரப்பியுள்ளனர். இதனிடையே, தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், மாநாடு நடைபெறும் இடத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
பொதுச்செயலாளர் ஆனந்த், கட்சியின் தலைவர் விஜய்யின் வழிகாட்டுதலின்படி, எளிய தொண்டர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் பண்பை வெளிப்படுத்துவதாகவும், மாநாட்டு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த மாநாடு 506 ஏக்கர் பரப்பளவில் பாரபத்தி பகுதியில் நடைபெறவுள்ளது, மேலும் விஜய்யின் அறிவிப்பின்படி, “வாகை சூடும் வரலாறு திரும்புகிறது” என்ற முழக்கத்துடன் பிரம்மாண்டமாக நடத்தப்பட உள்ளது.
