அப்போது செய்த தவறுக்காக இப்போது அனுபவிக்கிறார் ஓ.பன்னீர்செல்வம் – வைகோ சாடல்!

2011 சமயத்தில் ஓபிஎஸ் செய்த தவறுக்காகத் தான் அதன் பலனை தற்போது அனுபவித்து கொண்டு இருக்கிறார் என வைகோ பேசியுள்ளார்

vaiko about ops

சென்னை :மதிமுகவின் நிர்வாகக் குழு கூட்டம் இன்று (நவம்பர் 7, 2025) சென்னையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மொத்தம் 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், அதிமுக முன்னாள் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்) மற்றும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் ஆகியோரை வைகோ கடுமையாக விமர்சித்துப் பேசினார். இது தமிழக அரசியல் களத்தில் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

2011 சட்டமன்றத் தேர்தல் காலத்தில் ஓ.பன்னீர்செல்வம் செய்த தவறுக்காக இப்போது அவர் தண்டனை அனுபவித்து வருவதாக வைகோ குற்றம் சாட்டினார். “அப்போது அதிமுக கூட்டணிக்கு மதிமுக வர தயாராக இல்லை என ஜெயலலிதாவிடம் ஓபிஎஸ் தவறாகக் கூறிவிட்டார். உண்மையில் ஜெயலலிதா 15 தொகுதிகளும் ஒரு ராஜ்யசபா சீட்டும் தரத் தயாராக இருந்தார். ஆனால் ஓபிஎஸ் தவறான தகவல் கூறியதால் கூட்டணி பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது” என்று வைகோ தெரிவித்தார்.

இந்தத் தவறு காரணமாகவே ஓபிஎஸ் இப்போது அரசியல் ரீதியாக தண்டனை அனுபவிக்கிறார் என்றும் அவர் காட்டமாகப் பேசினார். அதனைதொடர்ந்த்து, கரூர் தவெக பொதுக்கூட்ட நெரிசல் சம்பவத்தில் (41 பேர் உயிரிழப்பு) விஜயின் செயல்பாடுகளை வைகோ “பித்தலாட்டம்” என்று கடுமையாகக் கண்டித்தார். “சென்னைக்கு அழைத்து வந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரிடம் துக்கம் விசாரித்த விஜய், யாரும் செய்யாத பித்தலாட்டத்தைச் செய்துள்ளார். முதலமைச்சர் அரசியல் பேச வேண்டாம் என்று கூறியும், விஜய் சகட்டுமேனிக்கு அரசியல் பேசியுள்ளார்” என்று வைகோ விமர்சித்தார்.

விஜயின் பொதுக்குழு உரையில் முதலமைச்சரைத் தாக்கியது பொறுப்பற்றது என்றும் அவர் குற்றம் சாட்டினார். மதிமுகவின் இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 12 தீர்மானங்களில், திமுக அரசின் சாதனைகளைப் பாராட்டுவது, எஸ்.ஐ.ஆர். வாக்காளர் பட்டியல் திருத்தத்தை எதிர்ப்பது உள்ளிட்டவை அடங்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.