சென்னை :இன்று மறைந்த முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா எனும் சி.என்.அண்ணாதுரை அவர்களின் 56வது நினைவு தினத்தை முன்னிட்டு அரசியல் தலைவர்கள் பலர் அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்தி வருகின்றனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் அறிஞர் அண்ணா நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.
சென்னை வாலாஜா சாலையில் இருந்து அமைதிப் பேரணியாக சென்று அண்ணா நினைவிடத்தில் முதலமைச்சர் மலர் தூவி மரியாதை செலுத்தினார். துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், திமுக அமைச்சர்கள் மற்றும் திமுக எம்பிக்கள் பலர் உடன் இருந்தனர். அதனை அடுத்து அருகில் உள்ள கலைஞர் கருணாநிதி நினைவிடத்திலும் மரியாதை செலுத்தினார்.
அதனை தொடர்ந்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திமுகவை விமர்சனம் செய்யும் நபர்கள் அவர்களாகவே தங்கள் சக்தி இழந்து ஓடிவிடுவார்கள். நாம் நமது லட்சிய பாதையில் பயணிக்க வேண்டும் என பதிவிட்டு, தந்தை பெரியார் குறித்து அறிஞர் அண்ணா கூறியதையும் நினைவுகூர்ந்தார்.
அவர் பதிவிடுகையில், ” அண்ணா வழியில் அயராது உழைப்போம். தந்தை பெரியார் குறித்து பேரறிஞர் அண்ணா கூறியது, “எது நேரிடினும் மனத்திற்பட்டதை எடுத்துச் சொல்வேன் என்ற உரிமைப் போர் பெரியாருடைய வாழ்வு முழுவதும். அதிலே அவர் கண்ட வெற்றி மிகப்பெரியது. அந்த வெற்றியின் விளைவு அவருக்கு மட்டும் கிடைத்திடவில்லை. இன்று அனைவரும் பெற்றுள்ளனர்.”
தந்தை பெரியாரின் புகழொளியையும் , அறிவொளியையும் தந்து நம்மை ஆளாக்கிய தமிழ்த்தாயின் தலைமகன் பேரறிஞர் அண்ணாவுக்குப் புகழ்வணக்கம். நம்முடைய நோக்கம் பெரிது, அதற்கான பயணமும் பெரிது. வம்பிழுக்கும் வீணர்கள் தெம்பிழந்து ஓடுவார்கள். நாம் மக்களின் அன்பையும் ஆதரவையும் பெற்று இலட்சியப் பயணத்தில் வெல்லப் பாடுபடுவோம்.” என பதிவிட்டுள்ளார்.
unknown node