இபிஎஸ்-க்கு ‘ஷாக்’? அதிமுக வழக்கு விசாரணைக்கு தடையில்லை! உயர்நீதிமன்றம் அதிரடி!
இரட்டை இலை சின்னம் உள்ளிட்ட அதிமுக உட்கட்சி விவகாரங்களை தேர்தல் ஆணையம் விசாரிக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

சென்னை : அதிமுகவின் இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இடையே நீண்ட காலமாக பனிப்போர் நிகழ்ந்து வருகிறது. இது தொடர்பான விசாரணையை தேர்தல் ஆணையம் நடத்தி வந்தது.
இரட்டை இலை தொடர்பான விவகாரம் என்பது உட்கட்சி விவகாரம் என்றும், இதில் தேர்தல் ஆணையம் தலையிடக்கூடாது என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு வழக்கு தொடர்ந்து இருந்தது. இந்த வழக்கில் முன்னதாக, அதிமுக உட்கட்சி விவகாரத்தில் தேர்தல் ஆணையம் விசாரணை நடத்த தடை விதித்து உத்தரவிடப்பட்டு இருந்தது.
இந்த விசாரணை தடையை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் மகனும் முன்னாள் தேனி தொகுதி எம்பியுமான ஓ.பி.ரவீந்திரநாத் மற்றும் புகழேந்தி ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தனர். இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியம், அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணை நடைபெற்று வந்தது.
இந்த வழக்கு விசாரணை முன்னதாக முடிவுற்ற நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதில், சின்னம் உள்ளிட்ட அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பான வழக்குகளை தேர்தல் ஆணையம் விசாரிக்கலாம் எனக் கூறி, எடப்பாடி பழனிச்சாமி தரப்பு, தேர்தல் ஆணைய விசாரணைக்கு தடை கோரி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது.