வேதா நினைவு இல்ல சாவியை தமிழக அரசே வைத்திருக்கலாம் – உயர்நீதிமன்றம்

The High Court has said that the government does not need to hand over the keys to the Veda memorial house to the court.

வேதா நினைவு இல்ல சாவியை நீதிமன்றத்தில் ஒப்படைக்க தேவையில்லை என்றும் அரசே வைத்திருக்கலாம் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சென்னை போயஸ் கார்டனில் உள்ள மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு இல்லமான வேதா இல்ல சாவியை தமிழக அரசே வைத்துக் கொள்ளலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. வேதா நினைவு இல்லத்தை பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்கக் கோரி தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீடு மனு இன்று விசாரணைக்கு வந்தபோது, நினைவு இல்ல சாவியை நீதிமன்றத்தில் ஒப்படைக்க தேவையில்லை என்றும் அதனை அரசே வைத்திருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.

திறப்பு விழா முடிந்ததும் நீதிமன்ற பதிவாளரிடம் சாவியை ஒப்படைக்க உத்தரவிட்ட தனி நீதிபதி ஆணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. தமிழக அரசு மேல்முறையீடு மனுக்கு பதிலளிக்க தீபா, தீபக்கிற்கு நோட்டிஸ் அனுப்பவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசின் வழக்கு விசாரணையை பிப்ரவரி 3-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து, அன்றைய தினம் பொதுமக்களுக்கு அனுமதி வழங்குவது குறித்து முடிவெடுக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

இதனிடையே, வேதா இல்லத்தை அரசு நினைவிடமாக திறக்க தடையில்லை என்றும் ஆனால், பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்க கூடாது உத்தரவு பிறப்பித்ததை அடுத்து, நேற்று மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வேதா நினைவு இல்லத்தை முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.