பாப்பம்மாள் பாட்டி மறைவு: பிரதமர் மோடி முதல் முதல்வர் ஸ்டாலின் வரை தலைவர்கள் இரங்கல்!

பத்ம ஸ்ரீ விருது பெற்றபாப்பம்மாள் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

Death of Papammal

கோயம்புத்தூர் : மேட்டுப்பாளையம் அருகே பத்ம ஸ்ரீ விருது பெற்ற பாப்பம்மாள் (108) உடல்நலக் குறைவு காரணமாக வெள்ளிக்கிழமை உயிரிழந்தார். அவரது உடல் தேக்கம்பட்டியில் உள்ள வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

இயற்கை விவசாயத்தில் ஆர்வம் கொண்ட பாப்பம்மாள் 100 வயதைக் கடந்தும் விவசாயம் செய்து வந்தார். இதற்காக, இவருக்கு 2021-ஆம் ஆண்டு பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட்டது. அப்போது, பாப்பம்மாளின் காலில் விழுந்து பிரதமர் நரேந்திர மோடி ஆசி பெற்றது குறிப்பிடத்தக்கது.

இவர், தான் விவசாயம் கற்ற வேளாண் பல்கலை. விவாதக் குழுவின் உறுப்பினராகவும் இருந்தார். சமீபத்தில், திமுகவின் பவள விழாவையொட்டி, பாப்பம்மாளுக்கு பெரியார் விருது அறிவிக்கப்பட்டது. அவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்ததால், உறவினர் ஜெயசுதா அந்த விருதை முதல்வர் மு.க.ஸ்டாலினிடமிருந்து கடந்த செப்டம்பர் 17-ஆம் தேதி பெற்றுக்கொண்டார்.

தற்பொழுது, பாப்பம்மாள் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

பிரதமர் மோடி

பிரதமர் மோடி தனது X பக்கத்தில், பாப்பம்மாளின் மறைவு மிகுந்த வேதனை அளிக்கிறது. விவசாயத்தில் குறிப்பாக இயற்கை விவசாயத்தில் தனக்கென தனி முத்திரை பதித்தவர். அவருடைய அடக்கம் மற்றும் கனிவான இயல்புக்காக மக்கள் அவரை நேசித்ததாகக் கூறியுள்ள அவர், தனது எண்ணங்கள் அவரது குடும்பத்தினருடனும் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின்

முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில், “அவர் தனது இறுதிமூச்சு வரையில், சுறுசுறுப்பாக வயலில் இறங்கி வேளாண் பணிகள் செய்ததாகவும், குடும்பத்தில் ஒருவரைப் பிரிந்த வலியுடன் தவிப்பதாகவும் வேதனை தெரிவித்தார். பாப்பம்மாளை இழந்து தவிக்கும் குடும் பத்தினர், உறவினர்கள், கட்சியினர் உள்ளிட்ட அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று முதல்வர் கூறியுள்ளார்.

கமல்ஹாசன்

கமல்ஹாசன் தனது எக்ஸ் பக்கத்தில், “இயற்கை விவசாயத்திலும், மக்கள் சேவையிலும் தன்னை தீவிரமாக ஈடுபடுத்தி நமக்கெல்லாம் சிறந்த முன்னுதாரணமாகத் திகழ்ந்த கோயம்புத்தூர் பாப்பம்மாள் அவர்கள் 108 வயதில் இயற்கை எய்தினார் எனும் செய்தி அறிந்து மிகுந்த வருத்தமடைந்தேன். அவரது உழைப்பும், சேவையும், அர்ப்பணிப்பும் என்றென்றும் நம் மனங்களில் நிலைத்திருக்கும். பாப்பம்மாள் அவர்களுக்கு என் அஞ்சலி.” என்று குறிப்பிட்டுள்ளார்.

அன்புமணி ராமதாஸ்

அன்புமணி ராமதாஸ் தனது இரங்கல் செய்தி குறிப்பில், இயற்கை விவசாய முன்னோடி பாப்பம்மாள் பாட்டி உடல்நலக் குறைவு காரணமாக, காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். இளம் தலைமுறையினருக்கு இயற்கை விவசாயம் குறித்து பாடங்களை நடத்தியவர். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாகக் கூறியுள்ளார்.

உதயநிதி

உதயநிதி  தனது எக்ஸ் பக்கத்தில், “நீட் விலக்கை வலியுறுத்தி கடந்தாண்டு நம் இளைஞரணி நடத்திய கையெழுத்து இயக்கம் வரை கொள்கை உறுதியோடு களத்தில் நின்ற பாப்பம்மாள் பாட்டியின் அர்ப்பணிப்பு, போற்றுதலுக்குரியது. அவரின் மறைவுக்கு என் ஆழ்ந்த இரங்கல். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர் – நண்பர்களுக்கு என் ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

வானதி சீனிவாசன்

வானதி சீனிவாசன் தனது எக்ஸ் பக்கதில், பத்ம ஸ்ரீ விருது பெற்றபாப்பம்மாள் மறைவுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தியதாக பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்