கர்நாடகா மாநில எழுத்தாளருக்கு இந்த வருட வைக்கம் விருது! தமிழக அரசு அறிவிப்பு!

2024ஆம் ஆண்டுக்கான வைக்கம் விருது அறிவிக்கப்பட்டுள்ள கர்நாடக எழுத்தாளர் தேவநூர மஹாதேவா அவர்களுக்கு இன்று அதற்கான பதக்கத்தையும், பாராட்டு சான்றிதழையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்க உள்ளார்.

2024 vaikom award to Kannada writer Devanuru Mahadeva

சென்னை :தாழ்த்தப்பட்ட மக்கள் என ஒதுக்கப்பட்ட மக்களுக்காக, அவர்களின் உரிமைக்காக தந்தை பெரியார் முன்னின்று போராடி வெற்றி பெற்ற வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு விழா இன்று கேரளா மாநிலம் வைக்கத்தில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்வில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் கேரளா மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர்.

இந்த நிகழ்வில் 2024ஆம் ஆண்டுக்கான வைக்கம் விருது பெறுபவரின் விவரத்தை தமிழ்நாடு அரசு அறிக்கை வாயிலாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி , கர்நாடக மாநிலத்தை சேர்ந்த எழுத்தாளர் தேவநூர மஹாதேவா அவர்களுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின். சட்டமன்றப் பேரவையில், கடந்த 30.03.2023 அன்று எல்லை கடந்து சென்று சமூக நீதிக்காக வைக்கத்தில் போராடிய தந்தை பெரியார் அவர்களை நினைவுகூறும் வகையில், பிற மாநிலங்களில் ஒடுக்கப்பட்டவர்கள் நலனுக்காகப் பாடுபட்டு. குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும் ஆளுமைகள் அல்லது நிறுவனங்களுக்கு ஆண்டுதோறும் “வைக்கம் விருது” சமூகநீதி நாளான செப்டம்பர் 17-ஆம் நாளன்று தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் என்று சட்டமன்றப் பேரவை விதி 110-இன்கீழ் அறிவித்தார்.

அந்த அறிவிப்பின் படி, 2024-ஆம் ஆண்டிற்கான “வைக்கம் விருது” கர்நாடக மாநிலம், மைசூரு மாவட்டத்தை சேர்ந்த புகழ் பெற்ற எழுத்தாளர் தேவநூர மஹாதேவா அவர்களுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தேவநூர மஹாதேவா அவர்கள் ஒரு சிறந்த எழுத்தாளர் மற்றும் சமூக ஆர்வலர் ஆவார். மக்களின் மொழியியல் உரிமைகளின் மீதான நிலைப்பாட்டில் அதிக ஈடுபாடு கொண்டவர். மேலும், சாதி அடிப்படையிலான பாகுபாடு மற்றும் அடக்குமுறைகளுக்கு எதிராகச் செயல்பட்டவர்.

இவர் மத்திய அரசின் உயரிய விருதான பத்மஸ்ரீ மற்றும் சாகித்ய அகாதெமி விருது போன்ற பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார். வைக்கம் விருதிற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட தேவார மஹாதேவா அவர்களுக்கு ரூ.5 லட்சத்திற்கான காசோலை, பாராட்டுச் சான்றிதழ் மற்றும் தங்க முலாம் பூசிய பதக்கத்தை தமிழ்நாடு முதலமைச்சர் கேரள மாநிலம் வைக்கத்தில் இன்று நடைபெறும் விழாவில் வழங்க உள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது.