டெல்லி :மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி சுவாச பிரச்சனை காரணமாக, கடந்த ஆகஸ்ட் 19இல் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவர் கடந்த செப்டம்பர் 12ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சீதாராம் யெச்சூரி மறைவுக்கு பிரதமர் மோடி, காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர். ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட தலைவர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
மறைந்த சிபிஎம் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரியின் உடல் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கற்பித்தல், ஆராய்ச்சி நோக்கத்துக்காக தானமாக வழங்கப்பட்டதாக முன்னரே, யெச்சூரி குடும்பத்தினர் அறிவித்துவிட்டனர்.
இந்நிலையில், சீதாராம் யெச்சூரி உடலுக்கு CPIM தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் நேரில் அஞ்சலி செலுத்துவதற்காக இன்று (செப்டம்பர் 14) டெல்லியில் உள்ள CPIM கட்சித் தலைமையகத்தில் வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அதற்காக, தற்போது யெச்சூரி உடல் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையலிருந்து கட்சி அலுவலகம் கொண்டுவரப்பட்டுள்ளது.
இன்றைய தினம் காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை கட்சித் தலைவர்கள், கட்சி தொண்டர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சீதாராம் யெச்சூரி உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்துவதற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் கட்சி அலுவலகம் வந்துள்ளனர்.
