இராக்கில் 3 ஆண்டுகளுக்கு முன்பே கொல்லப்பட்ட 39 இந்தியர்கள் உயிரோடு இருப்பதாக மோடி அரசு பொய் சொன்னது ஏன்..?

Default Image

இராக்கில் உள்ள ஐ.எஸ். பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 39 இந்தியர்களும் உயிருடன் இல்லை; அவர்கள் கொன்று புதைக்கப்பட்டு விட்டார்கள் என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் நாடாளுமன்றத்தில் வெளியிட்ட தகவல், சம்பந்தப்பட்ட குடும்பத்தினரை மட்டுமின்றி, ஒட்டுமொத்த நாட்டையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.அதேநேரத்தின் வெளியுறவுத் துறை அமைச்சரின் தகவல் ஏராளமான கேள்விகளையும், சர்ச்சைகளையும் எழுப்புவதாக அமைந்துள்ளது.ஐஎஸ் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட 39 பேரும், கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பேகடத்தப்பட்டு விட்டனர். ஆனால், இப்போது வரைஅந்த 39 பேரும் உயிருடன் இருப்பதாகவே அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் கூறி வந்தார். குடும்பத் தினருக்கு நம்பிக்கையும் அளித்து வந்தார்.ஆனால், 39 பேரும் படுகொலை செய்யப் பட்டு விட்டார்கள் என்று தற்போது திடீரென அறிவிக்கிறார் என்றால், எதனை அடிப்படையாக வைத்து இவ்வளவு நாளும் அவர்கள் உயிருடன் இருப்பதாக கூறிவந்தார் என்ற கேள்வி எழுந்துள்ளது.மத்திய கிழக்கு நாடான இராக்கின் மோசுல் நகரத்தை 2014 ஜூன் 10 அன்று இஸ்லாமிக் ஸ்டேட்ஸ் எனப்படும், ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பு கைப்பற்றியது. அவர்கள் துப்பாக்கி ஏந்தியவாறு உள்ளே நுழைந்தபோது – அதாவது ஜூன் 7-9 தேதிகளில் நகரத்திலிருந்த வெளிநாட்டவர்களை உடனடியாக அங்கிருந்து வெளியேறச் சொன்னது. ஆனால்,பெரும்பாலானோர் அங்கிருந்து செல்லவில்லை. இவர்களில்,அங்குள்ள பல்கலைக்கழக கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டிருந்த இந்தியர்களும் வங்கதேசத்தவர்களும் இருந்தனர். இந்நிலையில், இந்தியர்களும், வங்க தேசத்தவர்களும் உணவருந்திக் கொண்டு இருந்தபோது ஐ.எஸ் அமைப்பினர் அவர்களை பார்த்துவிட்டனர். இனி இங்கே தங்கக் கூடாது என்று சொன்ன ஐ.எஸ் பயங்கரவாதிகள், 40 இந்தியத் தொழிலாளர்களையும், கடத்திச் சென்று ஒரு துணி ஆலையில் தங்க வைத்தனர்.இவர்களில் இதில் 31 பேர் பஞ்சாப்பை சேர்ந்தவர்கள், 4 பேர் இமாச்சல பிரதேசத்தை சேர்ந்தவர்கள், மற்றவர்கள் பீகார் மற்றும் மேற்குவங்கத்தை சேர்ந்தவர்கள். பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூரைச் சேர்ந்த, ஹர்ஜித் மாஷி மட்டும், பயங்கரவாதிகளிடமிருந்து தப்பினார்.பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட இந்தியர்களை மீட்க, மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. இந்த விவகாரம் தொடர்ச்சியாக நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்டு வந்தது. கடத்தப்பட்டவர்களின் உறவினர்கள் தொடர்ந்து வெளியுறவுத் துறை அமைச்சகத்துக்கு அழுத்தம் கொடுத்து வந்தனர்.வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ்,கடத்தப்பட்ட தொழிலாளர்களின் உற வினர்களை சந்தித்தார். அந்த சந்திப்பின்போது வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி.கே. சிங்கும் உடன் இருந்தார்.ஆனால், பயங்கரவாதிகளிமிருந்து தப்பித்து வந்த ஒரே இந்தியரான ஹர்ஜித் மாஷி, “கடத்தப்பட்ட 39 பேரும் ஐ. எஸ் அமைப்பால் மோசுல் நகரில் இருந்து 30 கி.மீ.தொலைவில் உள்ள காட்டுப்பகுதிக்கு கொண்டுசெல்லப்பட்டு, வரிசையாக நிறுத்தப்பட்டு, தலையில் சுடப்பட்டு கொல்லப்பட்டு விட்டார்கள்” என்று 2015-ஆம் ஆண்டே கூறினார். ஆனால், இது பொய் என்று வெளியுறவுத் துறை அமைச்சகம் அன்று மறுத்து விட்டது.

கடைசியாக, மாநிலங்களவை உறுப்பினர் பிரதாப் சிங் பஜ்வா, 2017-ஆம் ஆண்டு ஜூலை 27-ஆம் தேதி இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார். அப்போதும், உறுதியான ஆதாரங்கள் கிடைக்கும் வரை, அவர்கள் இறந்துவிட்டார்கள் என்று கூறு முடியாது என்று மத்திய மோடி அரசு கூறி விட்டது. போதிய ஆதாரம் இல்லாமல் ஒருவர் இறந்துவிட்டார் என்று கூறுவது பாவத்திற்குரிய செயலாகும் என்று அன்றும் சுஷ்மா ஸ்வராஜூ கூறினார்.இதனிடையே, நீண்ட போருக்குப் பின் 2017-ஆம் ஆண்டு, இராக் பிரதமர் ஹைதர்அல்- அபைதி, மோசுல் நகரம் ஐஎஸ்பயங்கரவாதிகளிடமிருந்து மீட்கப்பட்டு விட்டதாக அறிவித்தார். அதன் பிறகு வி.கே. சிங், இராக் பயணமானார். இராக் பயணமான வி.கே.சிங், இந்திய தொழிலாளர்கள் பணி புரிந்த நிறுவனத்தின் தலைவரை சந்தித்தார். எனினும் உறுதியான தகவல்கள் எதுவும் இல்லை. 39 பேரும் உயிருடன் இருக்கிறார்கள் என்று மட்டும் வழக்கம்போல மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் கூறிவந்தார்.இந்நிலையில், செவ்வாய்க்கிழமையன்று நாடாளுமன்றத்தில் பேசிய சுஷ்மா ஸ்வராஜ், “ஐஎஸ் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 39 பேரும் உயிரிழந்ததாக அறிவிக்க மாட்டோம் என ஏற்கெனவே கூறியிருந்தேன்; ஆனால் தற்போது, 39 பேரும் கொல்லப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது” என்று அறிவித்தார்.மோசுல் நகருக்கு அருகில் உள்ள பாதோஷ் கிராமத்தில், அவர்கள் புதைக்கப்பட்டிருந்தது, நவீன தொழில்நுட்பங்கள் மூலம் கண்டு பிடிக்கப்பட்டு இருப்பதாகவும், டி.என்.ஏ., எனப்படும் மரபணு சோதனைகள் மூலம், கடத்தப்பட்ட 39 இந்தியர்களின் உடல்களும் அடையாளம் காணப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்த சுஷ்மா, “39 பேரும் சுடப்பட்டு, பின்,புதைக்கப்பட்டுள்ளனர். அங்கு நீண்ட தலை முடிகள், சீக்கியர்கள் கையில் அணியும் காப்பு,செருப்பு போன்றவை இருந்தன; மீட்கப்பட்ட உடல்களில், 38 உடல்கள், மரபணு சோத னையில் யார் யாருடையவை என, உறுதி செய்யப்பட்டுள்ளன. ஒருவரது உடல், 70 சதவீதம் வரை உறுதி செய்யப்பட்டு உள்ளது” என்றும் குறிப்பிட்டார்.மேலும் இந்த உடல்கள், தனி விமானம் மூலம் கொண்டு வரப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என்றும், இதற்காக, வெளியுறவுத்துறை இணையமைச்சர் வி.கே. சிங், இராக் செல்கிறார் என்றும் கூறினார்.

சுஷ்மா இவ்வாறு கூறிய உடனேயே, அவரது பேச்சுக்கு எதிர்க்கட்சிகள் தங்களின்கண்டனத்தைத் தெரிவித்தன. கடத்தப்பட்டவர்களை மீட்க அரசு முறையாக செயல்படவில்லை என்று குற்றம்சாட்டி, நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டன.இராக்கில் கடத்தப்பட்ட, 39 இந்தியர்களும் கொல்லப்பட்டுள்ளதாக, வெளியுறவு அமைச்சர், சுஷ்மா ஸ்வராஜ் அறிவித்ததும் நொறுங்கிப் போனேன்; அவர்களை உயிருடன் பார்ப்போம் என்ற நம்பிக்கையில் இருந்த குடும்பத்தாருக்கு இரங்கலை தெரிவித்து கொள்கிறேன் என்று பஞ்சாப் முதல்வர் அம்ரீந்தர் சிங் கூறினார்.“இராக்கில் கடத்தப்பட்ட, 39 பேரும் கொல்லப்பட்டதாக வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கூறியதாக, ‘டிவி’யில் செய்தி பார்த்தேன்; கடத்தப்பட்ட அனைவரும் உயிருடன் உள்ளதாக, மத்திய அரசும், அமைச்சர், சுஷ்மா சுவராஜூம் தொடர்ந்து உறுதிஅளித்து வந்தனர்; அதனால், சுஷ்மா சுவராஜ் நேரில் சொல்லாத வரை, என் சகோதரன் உயிரிழந்து விட்டதை நம்ப மாட்டேன்” என்று கடத்தப்பட்டவர்களில் ஒருவரான, பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த, மன்ஜிந்தர் சிங்கின் சகோதரி, குர்பீந்தர் கதறினார்.“இராக்கில், 2014-ஆம் ஆண்டு நாங்கள் பணிபுரிந்து கொண்டிருந்தோம், அப்போது எங்களை, ஐ.எஸ்., பயங்கரவாதிகள் கடத்திச்சென்று, பிணைக் கைதிகளாக வைத்திருந்தனர். அவர்களது துப்பாக்கிச் சூட்டில், என் தொடை யில் குண்டு பாய்ந்ததில், நான் மட்டும் உயிர் பிழைத்தேன்; மற்ற 39 பேர், என் கண் முன் கொல்லப்பட்டனர். அங்கிருந்து, நான் மட்டும் தப்பி வந்தேன். இதை, மூன்று ஆண்டுகளாக தெரிவித்து வருகிறேன். ஆனால், மத்திய அரசு, அப்போது ஏன் இதை நம்பவில்லை என்பது,எனக்கு ஆச்சரியம் அளிக்கிறது என்றார்” ஹர்ஜித் மாஷி. இதேபோல பலரும் தங்களின் விமர்சனத்தைவைத்தனர்.39 பேரும் மரணம் அடைந்தது ஏற்கெனவே சுஷ்மாவிற்கு தெரியும்; 5 மாதங்களுக்கு முன்பே அவருக்கு இந்த தகவல் உறுதியாக தெரிந்துள்ளது; ஆனால் அதற்கு பின்பும் கூட இந்தியர்களின் குடும்பங்களுக்கு நம்பிக்கை அளித்து வந்ததுடன், கடத்தப்பட்டவர்களை மீட்பதற்கான பேச்சுவார்த்தை நடக்கிறது, அவர்கள் உயிருக்கு எந்த பாதிப்பும் இருக்காது என்றும் கூறியது ஏன் என்கின்றனர்.இந்நிலையில், கொல்லப்பட்ட, 39 இந்தியர்களின் உடல்களை கொண்டு வருவது குறித்து, இராக் அரசுடன் பேசி வருகிறோம். சட்ட நடைமுறைகள் முடிந்து, உடல்களை கொண்டு வருவதற்கு, அதிகபட்சம், 10 நாட்களாகும் என்று மத்திய இணையமைச்சர் வி.கே. சிங் தெரிவித்துள்ளார்.இராக்கில் கடத்தி கொல்லப்பட்ட 39 இந்தியர்களின் விவரங்களையும் வெளியுறவுத் துறை வெளியிட்டுள்ளது.பஞ்சாப்பை சேர்ந்த தர்மிந்தர் சிங், ஹரிஷ்குமார், ஹர்சிம் ரஞ்சித்சிங், கன்வால் ஜித் சிங், மால்கித் சிங், ரஞ்சித் சிங், சோனு, சந்தீப்குமார், மஞ்ஜிந்தர் சிங், குருசரண் சிங், பல்வந்த் ராய், ரூப் பால், தேவிந்தர் சிங், குல்வந்திரி சிங், ஜதிந்தர் சிங், நிஷான் சிங்,குர்தீப் சிங், கமல்ஜித் சிங், கோபிந்தர் சிங்,பிரித்பால் ஷர்மா, சுக்விந்தர் சிங், ஜஸ்வீர் சிங், பர்விந்தர் குமார், பல்வீர் சந்த், சுர்ஜித் மைன்கா, நந்த்லால், ராகேஷ்குமார், இமாசலப்பிரதேசத்தை சேர்ந்த அமன்குமார், சந்தீப்சிங் ரானா, இந்தர்ஜித், ஹேம்ராஜ் ஆகியோரும், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சாமர்திகாதர், கோகன் சிக்தர் மற்றும் பீகாரை சேர்ந்த சந்தோஷ்குமார் சிங், பித்ய பூஷன் திவாரி, அதாலத் சிங், சுனில்குமார் குஷ்வாலா, தர்மேந்திர குமார் மற்றும் ராஜூகுமார் யாதவ் உள்பட 39 பேர் கொல்லப்பட்டு உள்ளனர் என்று அந்த பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது.ஈராக்கில் 39 இந்தியர்களும் பத்திரமாக இருப்பதாக இந்திய அரசு கூறி வந்த நிலை யில், நேற்று அவர்களின் மரணம் உறுதி செய்யப்பட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டதால் உறவினர்கள் அதிர்ச்சியில் அழுது புரண்டனர்.39 இந்தியர்கள் கொல்லப்பட்ட விவ காரத்துக்கு ஐக்கிய நாடுகள் அவை இரங்கல் தெரிவித்துள்ளது. ‘பயங்கரவாதிகளின் காட்டுமிராண்டித்தனமான செயலுக்கு இது ஒரு எடுத்துக்காட்டு’ என்று ஐக்கிய நாடுகள் அவை தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்