சென்னை :தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக, கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது.
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாளை முதல் 8ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும், சென்னையில் இன்று ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளது.
இந்த நிலையில், வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு உருவாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி
அதன்படி, வடமேற்கு அரபிக்கடலில் உருவாகிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது வடமேற்கு மற்றும் அதை ஒட்டிய மேற்கு மத்திய அரபிக்கடலில் உள்ளது.
வரும் 5ம் தேதி மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
