“ஷமி விளையாடிய விதம் என்னை ஆச்சர்யப்படுத்தவில்லை!” கங்குலி ஓபன் டாக்
வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் ஷமி 5 விக்கெட்டுகள் வீழ்த்தியதில் எனக்கு ஆச்சரியமுமில்லை, இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு தாக்குதலை ஷமி முன்னின்று வழிநடத்துவார் என கங்குலி கூறினார்.

கொல்கத்தா : சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் (இந்தியா விளையாடும் போட்டிகள் மட்டும்) தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி, வங்கதேசத்திற்கு எதிராக நேற்றைய ஆட்டத்தில் வெற்றிபெற்றது. அடுத்ததாக நாளை மறுநாள் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கும் இந்தியா -பாகிஸ்தான் போட்டி நடைபெற உள்ளது.
சாம்பியன்ஸ் டிராபி அணியில் ரோஹித் சர்மா, விராட் கோலி, கே.எல்.ராகுல், ஷ்ரேயஸ் ஐயர் என மூத்த வீரர்கள் பலமான பேட்டிங் லைன் அப்பில் இருக்க, வேகப்பந்து பவுலிங் லைன் அப்பில் அக்சர் படேல், ஹர்ஷித் ராணா ஆகியோர் உள்ளனர். அனுபவம் வாய்ந்த வேகப்பந்து வீச்சாளராக முகமது ஷமி மட்டுமே உள்ளார். இறுதிவரை ரசிகர்களும், இந்திய அணியும் எதிநோக்கிய பும்ரா இந்த சாம்பியன்ஸ் டிராபிக்கான அணியில் உடற்தகுதி காரணமாக இடம்பெறவில்லை.
இதுகுறித்து முன்னாள் இந்திய அணி கேப்டன் சவுரவ் கங்குலி தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். அதில், ” சாம்பியன்ஸ் டிராபியில் ஷமிக்கு துணையாக பும்ரா தேவை, பும்ராவுக்கு துணையாக ஷமி தேவை. ஆனால் பும்ரா உடற்தகுதியை பெறவில்லை. ஆனால், ஷமி அந்த உடற்தகுதியை பெற்றுள்ளர். அவர் கடந்த வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் 5 விக்கெட்டுகள் வீழ்த்தியதில் எனக்கு எந்த ஆச்சரியமுமில்லை.
அனுபவம் வாய்ந்த ஷமி தொடர் முழுவதும் இதே உடற்தகுதியுடன் செயல்படுவார் என்று நம்புகிறேன். இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு தாக்குதலை ஷமி முன்னின்று வழிநடத்துவார் என்று எதிர்பார்க்கிறேன். பும்ரா தற்போது உலகின் சிறந்த பந்து வீச்சாளர் தான். ஆனால், ஷமி அதற்காக மிகவும் பின்தங்கிய பந்துவீச்சாளர் என்று அர்த்தமில்லை.
பும்ரா இல்லாத இந்த சமயத்தில் ஷமி இந்தியாவுக்காக தனது அனுபவத்தை கொண்டு முன்னின்று நடத்தி இந்திய கொடி ஏந்திச் செல்ல வேண்டும். நடப்பு சாம்பியன்ஸ் டிராபியில் வேகப்பந்து வீச்சை வழிநடத்தும் பொறுப்பை அவர் ஏற்க வேண்டும்.”என கூறினார். சுழற்பந்து வீச்சாளர் லிஸ்டில் ஹர்திக் பாண்டியா, குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் உள்ளனர். இவர்கள் அனைவரும் அனுபவம் வாய்ந்த வீரர்கள் ஆவர்.
வங்கதேச அணிக்கு எதிராக ஷமி சிறப்பாக செயல்பட்டது போல வரும் ஞாயிற்றுக்கிழமை பாகிஸ்தானுக்கு எதிராக சிறப்பாக விளையாட வேண்டும் என்பதே பலரது விருப்பமாக உள்ளது.