திமுக அரசை, மக்கள் நிராகரிக்கும் நாள் வெகு தூரத்தில் இல்லை என முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் அறிக்கை.
ஆவின் பால் விலையை உயர்த்தியுள்ள மக்க விரோத திமுக அரசிற்கு கடும் கண்டனம் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தி.மு.க., ஆட்சிப் பொறுப்பிற்கு வந்த பிறகு மின்சாரக் கட்டணத்தை இரண்டு மடங்கு அளவுக்கு உயர்த்தி ஆண்டொன்றுக்கு 10,000 ரூபாய் அளவுக்கு மக்கள் மீது கூடுதல் சுமையை ஏற்படுத்தியது.
இதேபோல், சொத்து வரி அதிகரிக்கப்படமாட்டாது என்று அறிவித்த திமுக பொருளாதாரம் மேம்படாத சூழ்நிலையில் சொத்து வரியை பன்மடங்கு உயர்த்தி, மக்கள் மீது கூடுதல் சுமையை ஏற்படுத்தியுள்ளது. இதேபோன்று, தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் பொருட்டு ஆவின் பால் விலையை லிட்டருக்கு 3 ரூபாய் குறைத்த தி.மு.க., இதனால் ஏற்படும் இழப்பினை ஈடுகட்டும் வகையில், இந்த ஆண்டு பால் உப பொருட்களான தயிர், நெய், பாதாம் பவுடர், ஐஸ்க்ரீம் வகைகள் போன்றவற்றின் விலையை 20 சதவிகிதம் அளவிற்கு உயர்த்தியது.
நெய், தயிர், மோர் ஆகியவற்றின் விலைகளை ஜி.எஸ்.டி. வரிக்கு மேல் இரண்டு மடங்கு விலையை உயர்த்தியது. இதனைக் கண்டித்து நான்கூட அறிக்கை விடுத்திருந்தேன். ஆனால், இதற்கு தி.மு.க. அரசு விளக்கமளிக்கவில்லை. தற்போது, ஒரு லிட்டர் ஆரஞ்சு பால் பாக்கெட்டின் விலை அட்டைதாரர்களுக்கு 46 ரூபாய்க்கும், சில்லறை விலையில் வாங்குபவர்களுக்கு ரூ.48 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதனை இன்று முதல் ஒரு லிட்டர் ரூ.60 என ஆவின் நிறுவனம் உயர்த்தியிருப்பதாக தகவல்கள் வருகின்றன. ஒரு லிட்டர் பால் விலை 12 ரூபாய் அளவுக்கு, அதாவது 25 விழுக்காடு அளவுக்கு உயர்த்தப்பட்டிருக்கிறது. அதே சமயத்தில், கொள்முதல் விலையை லிட்டருக்கு 10 ரூபாய் உயர்த்தித் தர வேண்டுமென்று விவசாயிகளும், பால் விற்பனையாளர்களும் கோரிக்கை விடுத்த நிலையில், லிட்டருக்கு மூன்று ரூபாய் மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது.
மொத்தத்தில், பொதுமக்களும், பால் உற்பத்தியாளர்களும் ஏமாற்றப்பட்டு இருக்கிறார்கள். நம்பி வாக்களித்ததற்கு இன்னும் எத்தனை கொடுமைகளை அனுபவிக்க வேண்டுமோ என்ற பரிதாபத்திற்கு மக்கள் வந்துவிட்டார்கள். இது ‘திராவிட மாடல்’ அரசு அல்ல, ‘துரோக மாடல்’ அரசு. இதற்கு அனைத்திந்திய அதிமுக சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஏழை, எளிய மக்களை வஞ்சிக்கக்கூடாது என்ற எண்ணம் உண்மையிலேயே தி.மு.க. அரசுக்கு இருக்குமேயானால், பால் விலை உயர்வை உடனடியாக ரத்து செய்யவும், கொள்முதல் விலையை லிட்டருக்கு 10 ரூபாய் உயர்த்தவும் முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்த ஓபிஎஸ், மக்களை ஏமாற்றுகின்ற திமுக அரசை, மக்கள் நிராகரிக்கும் நாள் வெகு தூரத்தில் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
unknown node