ஆட்சிக்கு வந்தவுடன் மாணவர்களின் கல்விக்கடன் ரத்து -மு.க.ஸ்டாலின்

DMK leader MK Stalin has said Today, that the student loan will be canceled as soon as the DMK comes to power.

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் மாணவர்களின் கல்விக்கடன் ரத்து செய்யப்படும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதால், அரசியல் களம் சூடுபிடித்து வருகிறது. தமிழகத்தில் உள்ள கட்சிகள் அனைத்தும் தீவிரமாக பரப்புரையை மேற்கொண்டு வருகின்றனர்.அந்த வகையில், அதிமுகவை நிராகரிப்போம் என்ற தலைப்பில் திமுக மக்கள் கிராம சபை கூட்டம் தொடங்கி உள்ளது.கடந்த 10 ஆண்டு காலத்தில் அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு சந்தித்துள்ள அவலங்கள் – சரிவுகள் – தோல்விகளை மக்களுக்கு நினைவூட்டும் வகையில் இது தொடங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று ஈரோடு மேற்கு தொகுதி- வெள்ளோடு ஊராட்சியில் திமுக சார்பில் மக்கள் கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் திமுக தலைவர் முக ஸ்டாலின் பங்கேற்றார்.அப்பொழுது அவர் பேசுகையில்,திமுக ஆட்சி அமைந்தவுடன் மாணவர்களின் கல்விக்கடன் ரத்து செய்யப்படும்.100 நாட்கள் வேலைவாய்ப்புத் திட்டத்தை 150 நாட்களாக உயர்த்தவும் அன்றைய கூலியை அன்றே கொடுக்கவும் திமுக பரிசீலித்து வருகிறது.தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் கார்ப்பரேட் நிறுவனங்களின் பஞ்சு பதுக்கல் தடுக்கப்படும். நெசவாளர் நலன் பாதுகாக்கப்படும். ஜவுளி துறையில் புதிய சகாப்தம் உருவாக்கப்படும் என்று பேசியுள்ளார்.