2022 ஆம் ஆண்டு இறுதிக்குள் பிரதமர் மோடிக்கு புதிய இல்லம்..!

New home for Prime Minister Modi by the end of 2022 ..!

2022 ஆம் ஆண்டு இறுதிக்குள் பிரதமர் மோடிக்கு புதிய இல்லம் கட்டப்படும் என்று மத்திய பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது.

டெல்லியில் தற்போதுள்ள பாராளுமன்ற கட்டிடம் 100 ஆண்டுகளை நிறைவு செய்ய உள்ள நிலையில்,அதன் அருகிலேயே ரூ.971 கோடி செலவில் புதிய பாராளுமன்ற கட்டிடம் கட்ட மத்திய அரசு 2020 செப்டம்பர் 29 அன்று முடிவு செய்தது.இதற்கான ஒப்பந்தத்தை டாட்டா நிறுவனம் பெற்றுள்ளது.

2022-ம் ஆண்டில் நாட்டின் 75-வது சுதந்திர தினம் கொண்டாடப்படுவதற்கு முன்பு புதிய பாராளுமன்ற கட்டிடத்தை கட்டி முடிப்பதற்கான பணியில் மத்திய அரசு மும்முரமாக ஈடுபட்டு உள்ளது.

பல்வேறு தொழில்நுட்ப மற்றும் நவீன வசதிகளுடன்,தரைக்கு கீழே ஒரு தளம்,தரை தளம்,முதல் மற்றும் இரண்டாம் தளம் என மொத்தம் 4 தளங்களுடன் இந்த புதிய பாராளுமன்றம் கட்டப்பட உள்ளது.

இருப்பினும்,புதிய பாராளுமன்றம் கட்டுவதில் விதிமீறல்கள் இருப்பதாகவும் அதனை நிறுத்த வேண்டும் என்றும் கோரி பல்வேறு மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டன.

கடந்த ஆண்டு டிசம்பர் 7-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டில் இந்த மனு விசாரணைக்கு வந்தது,அதில் விசாரணை முடியும் வரை புதிய கட்டுமானங்களை எழுப்பவோ, பழைய கட்டு மானங்களை இடிக்கவோ கூடாது என சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

இதையடுத்து அடிக்கல் நாட்டு விழா நடைமுறை செயல்பாடுகளுக்கு மட்டும் சுப்ரீம் கோர்ட்டு அனுமதி வழங்கி கட்டுமானப் பணிகள் நடைபெறக்கூடாது என்று இடைக்கால தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில்,புதிய பாராளுமன்றம் கட்டும் திட்டத்தில் பிரதமருக்கான புதிய இல்லமும் கட்டப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து மத்திய அரசின் பொதுப்பணித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,பாராளுமன்ற கட்டிடப் பணிகள் 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாத இறுதிகுள்ளும்,பிரதமர் இல்ல கட்டுமனாப் பணிகள் 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதிக்குள்ளும் முடிக்கப்படும் என்றும்,இதற்கு 13,450 கோடி என செலவாகும் என்றும் தெரிவித்துள்ளது.