நள்ளிரவில் நடந்த சம்பவம்..முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கைது...

Former Union Minister Pon.Radhakrishnan arrested in the incident that took place at midnight ...

திருநெல்வேலி மாவட்ட திமுக எம்.பி ஞானதிரவியம் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி நள்ளிரவில் போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டார்.

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் பகுதியில் பாஜக நிர்வாகி பாஸ்கர் என்பவர், திருநெல்வேலி திமுக எம்பி ஞானதிரவியம் மற்றும் அவர் ஆதரவாளர்களால் தாக்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் பாஸ்கர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில்,மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பாஸ்கரை நேற்று நள்ளிரவு முன்னாள் அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தனது ஆதரவாளர்களுடன் சந்தித்து நலம் விசாரித்தார்.அதன்பின்னர்,பாஸ்கர் தாக்கப்பட்டதை கண்டித்து திமுக எம்பி ஞானதிரவியத்தின் மீது கொலை வழக்கு பதிவு செய்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி,திருநெல்வேலி சந்திப்பில் உள்ள பாரதியார் சிலை முன்பாக, முன்னாள் அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் நள்ளிரவில் தனது ஆதரவாளர்களுடன் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.இதனால்,அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து,சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பாஜகவினரிடையே பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.எனினும்,போராட்டம் தொடர்ந்ததால்,போராட்டத்தில் ஈடுப்பட்ட முன்னாள் அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது ஆதரவாளர்களை போலீசார் நள்ளிரவு கைது செய்தனர்.

இதனையடுத்து,திமுக எம்.பி ஞானதிரவியம் உள்ளிட்டோர் மீது பணகுடி காவல் நிலைய போலீசார் 4 பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.