ருசி கண்ட பூனையைபோல் பதவி வெறி பிடித்து திமுகவினர் சுற்றுத் திரிகின்றனர் – டிடிவி தினகரன்

TTV Dinakaran has said in his election campaign that if the DMK comes to power, people will not be able to walk on the road.

திமுக ஆட்சிக்கு வரும் சூழல் நிலவினால், மக்கள் ரோட்லகூட நடக்க முடியாது என்று டிடிவி தினகரன் தேர்தல் பரப்புரையில் பேசியுள்ளார்.

திருச்சி முசிறியில் தேர்தல் பரப்புரையில் பேசிய அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், ஊழல் என்றால் திமுக பெயர் தான் ஞாபகம் வரும். விஞ்ஞான முறையில் ஊழல் செய்கிறது திமுக தான். ஆகையால், மறுபடியும் வாய்ப்பு கிடைக்குமா என்று காத்துக்கொண்டிருக்கிறார்கள். தற்போது தமிழகத்தில் சுமார் 6 லட்சம் கோடி கடன் உள்ளது. முதல்வர் பழனிசாமி உள்ளிட்ட அமைச்சர்கள் சேர்ந்து எல்லாவற்றையும் முடித்துவிட்டு, கல்லாவில் சானிடைசர் அடித்து வைத்துவிட்டார்கள்.

திமுக ஆட்சிக்கு வந்தால், கட்டப்பஞ்சாயத்து, ரவுடிசம் தான். எப்பொழுது ஆட்சிக்கு வருவோம் என்று தவித்துக்கொண்டிருக்கிறார்கள். ருசி கண்ட பூனையைபோல் பதவி வெறி பிடித்து திமுகவினர் சுற்றுத் திரிகின்றனர். அதனால் தான் ஸ்டாலின் எதாவது பேசிக்கொண்டு வருகிறார். அவரது குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவரும் தயாராக இருக்கின்றார்கள் என விமர்சித்துள்ளார். ஆகையால் மக்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

ஒருவேளை திமுக ஆட்சிக்கு வரும் சூழல் நிலவினால், மக்கள் ரோட்ல கூட நடக்க முடியாது. வீட்டின் கொல்லைப்புறம் துணிகூட போடா முடியாது, எல்லாத்தையும் களவாடிக் கொண்டு சென்றுவிடுவார்கள் என டிடிவி தினகரன் கடுமையாக பேசியுள்ளார். எனவே, வரும் சட்டப்பேரவை தேர்தலில் நிதானமாக யோசித்து மக்கள் நல்ல முடிவை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.