அவதூறு பேச்சு: திமுக எம்பி ஆ.ராசா பிரச்சாரம் செய்ய தடை விதிக்கவேண்டும் – அதிமுக புகார்

AIADMK has complained to the Election Commissioner that it should take action against DMK MP A. Rasa and ban him from campaigning.

திமுக எம்பி ஆ.ராசா மீது நடவடிக்கை எடுத்து அவர் பிரசாரம் மேற்கொள்ள தடைவிதிக்க வேண்டும் என தேர்தல் ஆணையரிடம் அதிமுக புகார்.

திமுக துணை பொதுச்செயலாளரும் எம்.பியுமான ஆ.ராசா திமுக வேட்பாளர் டாக்டர் எழிலனுக்கு ஆதரவாக ஆயிரம் விளக்குத் தொகுதியில் நேற்று பிரசாரம் மேற்கொண்ட போது, முதல்வர் பழனிச்சாமியைப் பற்றி தரக்குறைவாக பேசி பிரச்சாரம் செய்த வீடியோ இணையத்தில் வைரலானதாக கூறப்படுகிறது.

இதையடுத்து ஆ.ராசாவின் பேச்சுக்கு திமுக மகளிரணி தலைவி கனிமொழி எம்.பி உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி பிரசாரத்தில் பேசி வரும் ஆ.ராசா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக வழக்கறிஞர் சார்பில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் பிரச்சாரத்தில் தரக்குறைவாக பேசி வருவதால் இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, இனிவரும் காலங்களில் திமுக எம்பி ஆ.ராசா எந்தவித தேர்தல் பிரசாரத்திலும் ஈடுபடாத வகையில் நிரந்தர தடை விதிக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையத்திடம் அதிமுக வலியுறுத்தியுள்ளது.

இதனிடையே, முதல்வர் பழனிசாமியை பற்றி தனிப்பட்ட முறையில் நான் விமர்சிக்கவில்லை என ஆ.ராசா தெரிவித்துள்ளார். எனது பேச்சை வெட்டியும், ஒட்டியும் சமூக வலைத்தளங்களில் தவறாக பரப்பப்படுகிறது. திமுக தலைவர் முக ஸ்டாலின், முதல்வர் பழனிசாமி ஆகிய இருவரையும் அரசியல் குழந்தையாக ஒப்பிட்டு பேசியதை வெட்டி, ஒட்டி பரப்புகின்றனர்.

மேலும், முதல்வரின் மாண்புக்கு சேதம் விளைவிக்கும் வகையில் எந்த கருத்தையும் கூறவில்லை என முதல்வரை அவதூறாக விமர்சித்ததாக அதிமுக தேர்தல் அதிகரிடம் புகார் அளித்த நிலையில், ஆ.ராசா விளக்கமளித்துள்ளார்.