ஓபிஎஸ் மீது புகார்.. பீரோவை உடைத்து, அசல் பத்திரம் கொள்ளை – சி.வி.சண்முகம்

அதிமுக அலுவலகம் சூறையாடப்பட்டு பொருட்களை எடுத்து சென்றது தொடர்பாக புகார் என சி.வி.சண்முகம் பேட்டி.

அதிமுக அலுவலகம் சூறையாடப்பட்டு பொருட்களை எடுத்து சென்றது தொடர்பாக புகார் என சி.வி.சண்முகம் பேட்டி.

சென்னை ராயப்பேட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம், அதிமுக தலைமை அலுவலகத்தின் பீரோவை உடைத்து, கட்சியின் தலைமை அலுவலக அசல் பத்திரம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம் உள்ளிட்டோர் மீது ராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளோம். கோவை, புதுச்சேரி, திருச்சி அதிமுக அலுவலக இடத்திற்கான அசல் பத்திரங்களும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

அதிமுக பதிவு செய்யப்பட்டதற்கான சான்றிதழும் கொள்ளை, அண்ணா சாலையில் உள்ள சபையர் தியேட்டர் இடத்தின் அசல் பாத்திரம் காணவில்லை. இதுபோன்று அதிமுகவுக்கு சொந்தமான 37 மோட்டார் வாகனங்களின் அசல் பதிவு சான்றிதழ்களும் காணவில்லை என புகார் அளித்துள்ளோம். அதிமுக தலைமை அலுவலகத்தில் கதவை உடைத்து, பீரோவை உடைத்து ஆவணங்களை திருடியுள்ளனர்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அறையை கடப்பாரையை வைத்து இடித்து நொறுக்கியுள்ளனர். 300 அடியாட்களுடன் வந்து கட்சி தலைமை அலுவலகத்தை அடித்து உடைத்துள்ளனர். அதிமுக தலைமை அலுவலகத்துக்கு சீல் வைக்க காரணமாக இருந்தவர் ஓபிஎஸ். ஏற்கனவே ஓபிஎஸ் மீது கொடுக்கப்பட்ட புகார் மீது இப்போது வரை நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் தெரிவித்தார்.