மருத்துவரைக் காப்பாற்ற நிதி திரட்டிய கிராம மக்கள்;அவர்களுக்கு ஆந்திர அரசு செய்த உதவி...!

Andhra Pradesh Chief Minister Jagan Mohan Reddy has donated Rs 1.50 crore for the treatment of a doctor who was suffering from corona

கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடிய மருத்துவரைக் காப்பாற்ற ரூ.20 லட்சம் நிதி திரட்டிய கிராம மக்கள்.

அவரின் சிகிச்சைக்கு ரூ.1.50 கோடி நிதியளித்த ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி.

ஆந்திர மாநிலத்தின் கரஞ்சேடு பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில்,இரண்டு ஆண்டுகளாக பாஸ்கரராவ் என்பவர் மருத்துவராகப் பணியாற்றி வருகிறார்.

அதன்படி,அனைத்து கிராம மக்களுக்கும் அவர் மிகுந்த அன்புடன் சேவை செய்தார்.மேலும்,கொரோனா தொற்றிலிருந்து பலரையும் காப்பாற்றி உள்ளார்.

இதற்கிடையில்,மருத்துவர் பாஸ்கரராவ் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.மேலும்,அவரது நுரையீரலில் கொரோனா தொற்று அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தியதால், ஹைதராபாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் வெண்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

இதனால்,அவரின் சிகிச்சைக்கு அதிகபட்சமாக இரண்டு கோடி வரை செலவாகும் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில்,தங்களுக்காக சேவை செய்த மருத்துவரை காப்பாற்றுவதற்காக தற்போது கிராம மக்கள் நிதி திரட்டி வருகின்றனர்.அந்த வகையில்,இதுவரை ரூபாய் 20 லட்சம் நிதி திரட்டி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனையடுத்து,கிராம மக்களின் முயற்சி குறித்து அறிந்த ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி,அவர்கள் மருத்துவரின் நுரையீரல் மாற்று சிகிச்சைக்கு ரூ.1 கோடியே 50 லட்சம் நிதியுதவி அளிப்பதாகவும், மேற்கொண்டு பணம் தேவைப்பட்டால்,அதற்கான மருத்துவ செலவை அரசே ஏற்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பு கரஞ்சேடு கிராம மக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.