திருச்சி BHEL-ல் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் – வைகோ கோரிக்கை

General Secretary of mdmk vaiko insisted that arrangements should be made to start the production of oxygen at the Trichy Bell plant.

திருச்சி பெல் ஆலையில் ஆக்சிஜன் தயாரிக்கும் பணிகளை தொடங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தல்.

இதுதொடர்பாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், திருச்சியில் உள்ள பெல் ஆலையில் ஆக்சிஜன் தயாரிக்கும் பணிகளை உடனே தொடங்க ஏற்பாடு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு வலியுறுத்தியுள்ளார்.

திருச்சி பாரத் மிகுமின் நிறுவனத்தில் (BHEL), மருத்துவப் பயன்பாட்டுக்கான ஆக்ஸிஜன் உற்பத்தி தொழிற்கூடத்தில் பராமரிப்பு பணிகளை முறையாக மேற்கொள்ளாதால், கடந்த 2016 முதல் உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளார். அதுவரை மருத்துவப் பயன்பாட்டுக்கான ஆக்சிஜன் உற்பத்தி தொழிற்கூடம் நல்ல முறையில் இயங்கி வந்தது என்றும் கூறியுள்ளார்.

அங்கு 8 மணி நேரத்தில், 1000 கியூபிக் மீட்டர் அதாவது, 150 உருளைகள் ஆக்ஸிஜனை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது. ஒரு நாளைக்கு மூன்று வேலை நேரங்களில் குறைந்தது 400 உருளைகள் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய முடியும். கடந்த 2016 வரை, திருச்சி பெல் மருத்துவமனையில், இங்கு உற்பத்தி செய்யப்படும் ஆக்ஸிஜன் பயன்படுத்தப்பட்டு வந்தது என்றும் வைகோ தெரிவித்துள்ளார்.

ஐந்து ஆண்டுகள் கடந்தும் இன்றுவரை பெல் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி தொழிற்கூடம் இயக்கப்படாமல் உள்ளது. ஆகையால், பெல் ஆலையில் ஆக்சிஜன் தயாரிக்கும் பணிகளை உடனே தொடங்க நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசுக்கு வலியுறுத்தி உள்ளார்.