ஹைதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இதுவரை 1,297 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வட அமெரிக்காவில் உள்ள கரீபியன் தீவுகளில் ஒன்றான ஹைதியில் நேற்று முன்தினம் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.2 ஆக பதிவாகிய இந்த நிலநடுக்கம் தலைநகர் போர்ட்-ஆப்-பிரின்சில் இருந்து 125 கிலோ மீட்டர் தொலைவில் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஹைதியில் உள்ள பல கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகியது. உடனடியாக அப்பகுதியில் மீட்புப் படையினர் வரவழைக்கப்பட்டு மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும், ஹைதியில் ஒரு மாத காலத்திற்கு பேரிடர் அவசர நிலையையும் ஹைதி பிரதமர் ஏரியல் ஹென்றி அறிவித்துள்ளார். இந்த நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதுவரை 1,297 பேர் இந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்துள்ளதாகவும், 2,800-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.