லண்டனில் சிறிய ரக விமானம் தரையில் விழுந்து நொறுங்கி விபத்து – 4 பேர் பலி.!

சவுத்எண்ட் விமான நிலையத்தில் பீச்கிராஃப்ட் B200 விமானம் விபத்துக்குள்ளானதில் குறைந்தது நான்கு பேர் பலியானதாக தெரிய வந்துள்ளது.

london southend airport

சவுத்எண்ட் :லண்டன் சவுத்எண்ட் விமான நிலையத்தில் நேற்றைய தினம் (ஜூலை 13) மாலை 4 மணியளவில் ஒரு சிறிய விமானம் (Beechcraft B200 Super King Air) விபத்துக்குள்ளானது. இந்த விமானம் நெதர்லாந்தின் லேலிஸ்டாட் நோக்கி புறப்பட்ட சிறிது நேரத்தில், டேக்-ஆஃப் செய்த சில வினாடிகளில் இடது புறமாக சாய்ந்து, தலைகீழாகி தரையில் மோதி வெடித்து தீ எரிந்தது.

சவுத்எண்ட் விமான நிலையம் பிரிட்டிஷ் தலைநகர் லண்டனுக்கு கிழக்கே சுமார் 72 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. பீச் கிராஃப்ட் பி200 விமானம் என்பது, மருத்துவ போக்குவரத்து மற்றும் தனியார் பயணங்களுக்காகப் பயன்படுத்தப்படும் ஒரு இரட்டை என்ஜின் விமானமாகும்.

விபத்துக்குள்ளான விமானம் 12 மீட்டர் நீளம் கொண்டதாகக் கூறப்படுகிறது. இது 12 பயணிகளை ஏற்றிச் செல்லும் திறன் கொண்டது என்று நம்பப்படுகிறது. மேலும், விமானம் நெதர்லாந்தைச் சேர்ந்த Zeusch Aviation நிறுவனத்தால் இயக்கப்பட்டது (விமான எண் SUZ1) என தெரிய வந்துள்ளது.

விபத்தைத் தொடர்ந்து, விமான நிலையம் “மறு அறிவிப்பு வரும் வரை” மூடப்பட்டது, மேலும் விமான நிலையத்திற்குச் செல்லும் மற்றும் புறப்படும் அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டன. விமானத்தில் எத்தனை பேர் இருந்தனர் மற்றும் அவர்களின் நிலை குறித்து தகவல் முதலில் வெளியிடவில்லை.

தற்பொழுது, இந்த விபத்தில் நான்கு பேர் உயிரிழந்ததாக PA செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த விபத்து தொடர்பாக சமூக ஊடகங்களில் வெளியான வீடியோக்களில், விமானம் விபத்துக்குள்ளாகி எரியும் காட்சிகளில் வெளியேறும் கரும்புகை பயங்கர விபத்து என்பதை எடுத்து காட்டுகிறது.

unknown node