திட்டமிட்ட நேரத்தை தாண்டி பயணிக்கும் விஜய்...வழக்குப்பதிவு செய்ய வாய்ப்பு?

திருச்சியில் விஜயை பார்க்க கூட்டம் கூடியுள்ள காரணத்தால் அவசர வேலை, அவசர பயணம் செல்லும் பொது மக்கள் கடும் அவதியில் உள்ளனர். திட்டமிட்ட படி விஜய்யின் பிரசாரம் தொடங்குவதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது.

vijay in Trichy

திருச்சி :தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க) தலைவர் விஜய், ‘உங்க விஜய் நா வரேன்’ என்ற மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணத்தை திருச்சியில் தொடங்கினார். காலை 9:40 மணிக்கு திருச்சி விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விஜயின் பிரச்சார வாகனம், ஆயிரக்கணக்கான தொண்டர்கள் குவிந்ததால் கடுமையான தாமதத்தை சந்தித்தது. வழிநெடுகிலும் த.வெ.க தொண்டர்கள் அலைகடலெனத் திரண்டு வரவேற்றதால், விமான நிலையத்திலிருந்து மரக்கடை வரையிலான 3 கிலோமீட்டர் பயணத்துக்கு மட்டும் 2 மணி 45 நிமிடங்கள் ஆகியது.

இந்த உற்சாக வரவேற்பு, விஜயின் அரசியல் பிரவேசத்தின் பெரும் ஆதரவை பிரதிபலித்தாலும், போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தியது. போலீஸ் கண்டிப்பான வழிகாட்டுதல்களின்படி, சுற்றுப்பயணம் நடைபெறும் என்றாலும், தொண்டர்களின் ஆர்வம் எதிர்பார்த்ததை விட அதிகமாக இருந்தது. திருச்சி நகரம் முழுவதும் விஜயின் பிரச்சாரத்தை காண ஆர்வமூட்டிய த.வெ.க தொண்டர்களால் போக்குவரத்து முற்றிலும் ஸ்தம்பித்தது.

4 மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்த உற்சாகம் குறையாமல், தொண்டர்கள் விஜயின் வாகனத்தை பின்தொடர்ந்தனர். மரங்கள், கம்பிகள், சுவர்கள் மீது ஏறி அவரை அருகில் காண முயன்ற தொண்டர்கள், காவலர்களின் உதவியுடன் பாதுகாக்கப்பட்டனர். கூட்டம் அலைகடலென திரண்ட காரணத்தால் பொது வரவேற்புகள், ரோடு ஷோக்கள் தடை செய்யப்பட்டன. இருப்பினும், தொண்டர்களின் ஆர்வம் அளவுக்கு மீறி, நகரின் இயல்பு வாழ்க்கையை பாதித்தது.

மரக்கடை பகுதியில் த.வெ.க தலைவர் விஜய் பிரச்சாரம் செய்ய, போலீஸ் காலை 10:30 மணி முதல் 11:00 மணி வரை மட்டும் அனுமதி அளித்திருந்தது. ஆனால், தாமதத்தால் குறிப்பிட்ட நேரத்தில் அங்கு செல்ல முடியவில்லை, இதனால் பிரச்சாரம் தொடங்குவதில் கூடுதல் சிக்கல்கள் ஏற்பட்டன. மேலும், அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி பிரச்சாரம் செய்தால், வழக்கு பதிவு செய்யவும் வாய்ப்பு இருக்கிறது எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.