திருவிழாக்களில் பாரம்பரிய கலை, கலாச்சார நிகழ்ச்சிகள் – இந்து சமய அறநிலையத்துறை அறிவிப்பு!

திருக்கோயில்களில் நடத்தப்படும் திருவிழாக்களில் பாரம்பரிய நிகழ்ச்சிகள் இடம்பெற வேண்டும் என அறிவிப்பு.
திருக்கோயில்களில் ஆண்டுதோறும் நடத்தப்படும் திருவிழாக்களில் நம்முடைய பாரம்பரிய கலை, கலாச்சார நிகழ்ச்சிகள் இடம்பெற வேண்டும் என்று இந்து சமய அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியிட்டுள்ளார் அறிவிப்பில், தமிழகத்திலுள்ள திருக்கோயில்கள் நமது பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் பிரதிபலிப்பனவாகவும், பண்டைய மன்னர்களால் கட்டப்பட்ட திருக்கோயில்களிலுள்ள சிற்பங்கள், கற்றளிகள் நம் கட்டிட கலைக்கு பெரும் எடுத்துக்காட்டுகளாகவும், நமது பண்டைய நாகரீகத்தின் சின்னங்களாகவும், உலக மக்கள் அனைவரையும் கவர்ந்திழுக்கும் வண்ணமும் அமையப் பெற்றுள்ளன.
அவற்றை போற்றி பாதுகாப்பது இத்துறையின் தலையாய கடமையாகும். அதேபோன்று முற்காலம் தொட்டு திருக்கோயில்களில் நடைபெற்று வரும் திருவிழாக்கள், வழிபாட்டு முறைகள், போன்றவற்றையும் அவற்றின் பாரம்பரியத்தினை போற்றும் வண்ணம் நடத்துவதும் இத்துறையின் முக்கிய கடமையாகும்.
இதனால் துறைக்கட்டுப்பாட்டின் கீழுள்ள திருக்கோயில்களில் ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழாக்கள், வழிபாடுகள், பிரம்மோற்சவங்கள், தேர்த் திருவிழாக்கள், குடமுழுக்குகள், வருஷாபிசேகங்கள், கொடை விழாக்கள் போன்றவற்றிற்காக ஏற்பாடு செய்யப்படும் கலை நிகழ்ச்சிகளில் மேற்படி விழாக்களின் சிறப்பம்சங்கள் பண்டைய நாகரீகத்தின் பெருமைகள், வழிபாட்டு முறைகளின் தத்துவங்கள், திருக்கோயில்களின் தலவரலாறுகள் போன்றவற்றை தற்கால தலைமுறையினர் அறிந்துகொள்ளும் வகையில் நடத்த வேண்டும்.
மேலும், திருக்கோயிலுக்கு வருகை தரும் பக்தர்கள் கண்டுகளித்து இன்புற்று மகிழும் வண்ணமும் நமது பாரம்பரிய கலை, கலாச்சார, ஆன்மீக சமய நிகழ்ச்சிகள் நடத்தப்பெற வேண்டும் என்றும் என்றும் தமிழ்நாடு அரசு இசைக்கல்லூரி, இசைப்பள்ளிகளில் பயின்று பயிற்சி பெற்ற கலைஞர்களை கொண்டு நடத்த வேண்டும் என அனைத்து அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது என இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.