விட்டுக்கொடுப்பவர்கள் கேட்டுப் போவதில்லை....அதிமுக கூட்டணியில் இணைந்த டிடிவி தினகரன்!

தேசிய ஜனநாயகக் கூட்டணி இணைவதாக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

Featured image

சென்னை :அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) இணைவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். சென்னையில் இன்று (ஜனவரி 21) செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “மக்கள் விரும்பும் நல்லாட்சியை உருவாக்க தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைய இருக்கிறோம்” என்று தெரிவித்தார். இதற்காக பாஜக மேலிட பொறுப்பாளர் பியூஷ் கோயலை இன்று சந்திக்க உள்ளதாகவும் கூறினார்.கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாஜக கூட்டணியில் இருந்து விலகியிருந்த டிடிவி தினகரன், தற்போது நிலைப்பாட்டை மாற்றியுள்ளார்.

ஒரு மாதத்திற்கு முன்னர் எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்க மாட்டோம் என்று கூறி, “துரோகத்தை எப்படி ஏற்க முடியும்” என்று கடுமையாக விமர்சித்திருந்தார். ஆனால் இப்போது “விட்டுக்கொடுத்தவர்கள் கேட்டுப் போவதில்லை” என்று கூறி, கூட்டணியில் இணைவதாக அறிவித்துள்ளார்.டிடிவி தினகரன் மேலும் கூறுகையில், “ஜெயலலிதா அம்மா அவர்கள் ஆட்சி அமைய தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைகிறோம்.

மீண்டும் நல்லாட்சி வருவதற்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம்” என்று தெரிவித்தார். இந்த அறிவிப்பு தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு பாஜக-அதிமுக-அமமுக கூட்டணி உறுதியாகும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.சென்னையில் அமமுக மாவட்ட செயலாளர்களுடன் நேற்று ஆலோசனை நடத்திய டிடிவி தினகரன், இன்று பாஜக மேலிட பொறுப்பாளர் பியூஷ் கோயலை சந்தித்து கூட்டணி தொடர்பாக விவாதிக்க உள்ளார்.

இந்த சந்திப்புக்குப் பிறகு கூட்டணி குறித்து மேலும் தெளிவான அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் மீண்டும் அதிமுக கூட்டணி ஆட்சி அமைய வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.இந்த அறிவிப்பு திமுக அரசுக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளது. டிடிவி தினகரனின் முடிவு தமிழக அரசியல் சமன்பாட்டை மாற்றும் என்று அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன. பொங்கல் பண்டிகைக்குப் பிறகு தேர்தல் களம் சூடுபிடிக்கும் நிலையில், இந்தக் கூட்டணி முடிவு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.