பாஜக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட பட்ஜெட்களிலேயே மிக மோசமானது இதுதான் – தொல்.திருமாவளவன்

viduthalai chiruthaigal katchi leader Tilak Thirumavalavan has said that the financial statements that deceive the poor are the central budget.

ஏழை எளிய மக்களை ஏமாற்றும் நிதிநிலை அறிக்கை என்று மத்திய பட்ஜெட் குறித்து விடுதல் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் அறிக்கை.

மத்திய பட்ஜெட் குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மோடி அரசு தாக்கல் செய்துள்ள நிதிநிலை அறிக்கை வழக்கம்போல கார்ப்பரேட்டுகளுக்கு உதவுவதாகவும், நடுத்தர ஏழை எளிய மக்களை மேலும் வறுமையில் ஆழ்த்துவதாகவும் இருக்கிறது. இந்த மக்கள் விரோத பட்ஜெட்டை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

இந்த பட்ஜெட்டில் வைரத்துக்கான வரியை 10 விழுக்காட்டிலிருந்து 5 விழுக்காடாக குறைத்திருக்கிறார்கள். அதுபோலவே கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான கூடுதல் வரியை 12 விழுக்காட்டிலிருந்து 7 விழுக்காடாகக் குறைத்திருக்கிறார்கள். ஆனால் மாத சம்பளம் வாங்கும் நடுத்தர வர்க்க மக்கள் நீண்டகாலமாக வலியுறுத்தி வரும் தனிநபர் வருமான வரி உச்சவரம்பில் எந்த சலுகையும் அளிக்கப்படவில்லை.

இந்தியாவில் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு வேலை இல்லாத் திண்டாட்டம் தலைவிரித்தாடுகிறது. இந்த பட்ஜெட்டில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கோ, வறுமை ஒழிப்பு நடவடிக்கைகளுக்கோ எந்த ஒரு அறிவிப்பும் செய்யப்படவில்லை. மாறாக கிராமப்புற ஏழை எளிய மக்களை மேலும் வஞ்சிப்பதாகவே இந்த பட்ஜெட் அமைந்திருக்கிறது.

மாநிலங்களுக்கு வழங்கப்படும் ஜிஎஸ்டி இழப்பீடு 2022ஆம் ஆண்டோடு முடிகிறது. அதை நீட்டிப்பது தொடர்பாக எந்தவொரு அறிவிப்பும் இதில் செய்யப்படவில்லை.

மாநிலங்களுக்கு வட்டியில்லாமல் கடன் கொடுப்போம் என்று கூறியிருக்கிறார்கள். ஜிஎஸ்டி வரி வருவாயில் மாநிலங்களுக்கு சேர வேண்டிய நியாயமான தொகையை வழங்காமல் ஏய்க்கும் விதமாக கூடுதல் வரிகளை விதித்து சுரண்டுகிற மத்திய அரசு அதில் எவ்வித மாற்றமும் செய்யாமல் கடன் கொடுக்கிறோம் என்று சொல்வது மக்களை வஞ்சிப்பது தவிர வேறில்லை.

விவசாயிகளின் வருமானத்தை இரண்டு மடங்காக உயர்த்துவோம் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். ஆனால் அது தொடர்பாக எந்த அறிவிப்பும் இந்த பட்ஜெட்டில் இல்லை. மாறாக பயிர் இன்சூரன்ஸ் திட்டத்துக்கான நிதியை கடந்த ஆண்டைவிட 5 ஆயிரம் கோடி குறைத்திருக்கிறது மோடி அரசு.

எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கு வழங்கப்படும் ப்ரிமெட்ரிக் (Prematric) படிப்பு உதவித்தொகைக்கான நிதி கடந்த ஆண்டைவிடக் குறைக்கப்பட்டிருக்கிறது.முஸ்லிம்களுக்கான நலத் திட்டங்களுக்கும் நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டுள்ளது.

பாஜக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட பட்ஜெட்களிலேயே மிக மோசமானதாகவும். இந்தியாவைப் பின்னோக்கி இழுத்துச் செல்வதாகவும் உள்ள இந்த பட்ஜெட், உழைக்கும் எளிய மக்களுக்கு எதிரானது. உழைப்போரை உறிஞ்சும் பெருமுதலாளிகளின் கார்ப்பரேட்டுகள் மற்றும் முன்னேறிய மேட்டுக்குடியினருக்கும் பாதுகாப்பானது என்பது உறுதியாகியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

unknown node